டீ வழங்கிய ஹரிவன்ஷ் சிங்..ட்விட்டரில் டுவிஸ்ட் வைத்து..பீகார் தேர்தலுக்கு ஸ்கோர் செய்த பிரதமர் மோடி!
டெல்லி: தர்ணாவில் ஈடுபட்ட எம்பிகளுக்கு டீ வழங்கிய ஹரிவன்ஷ் சிங்கிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஜனநாயக மாண்புகளை ஹரிவன்ஷ் சிங் காப்பாற்றுகிறார். பீகார் மாநிலம் ஜனநாயகத்தின் மதிப்பீடுகளை நமக்கு உணர்த்துகிறது என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
வேளாண் மசோதாவை எதிர்த்து ராஜ்யசபாவில் விதிமுறைகளை மீறி வன்முறையில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங் எம்பி டெரக் ஓ பிரைன், டோலா சென், இளமாறம், கதீரம், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்பி ராஜீவ் சாதவ், நசீர் ஹூசைன், ரிபுன் போரேன், மார்க்சிஸ்ட் எம்பி கேகே ராகேஷ் ஆகிய 8 எம்பிக்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து ராஜ்யசபா தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன் உண்ணாவிரதம்.. ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் திடீர் அறிவிப்பு
தர்ணா
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 எம்பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு நேற்று இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை தர்ணாவில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜ்ய சபா
இந்த நிலையில் இவர்களுக்கு இன்று காலை ராஜ்ய சபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் டீ கொண்டு சென்றார். ஞாயிற்றுக் கிழமை ராஜ்ய சபாவில் வேளாண் மசோதா நிறைவேறும்போது இவர்தான் அவையில் இருந்தார். இந்த நிலையில் இவர் இன்று டீ கொண்டு சென்று கொடுத்தது வியப்பை ஏற்படுத்தி இருந்தது. தன்னை எம்பிக்கள் அவமரியாதையாக நடத்தியதாகக் கூறி இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஹரிவன்ஷ் சிங்கும் அறிவித்துள்ளார்.
பெரிய மனது
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி இவரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். தனது பதிவில், ''தன்னை தாக்கி, அவமரியாதை செய்து தர்ணாவில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு இன்று காலை ஹரிவன்ஷ் ஜி டீ வழங்கியுள்ளார். ஹரிவன்ஷ் ஜி ஒரு தாழ்மையான மனதுடனும் பெரிய இதயத்துடனும் ஆசீர்வதிக்கப்பட்டவராக நடந்து கொண்டுள்ளார். இது அவருடைய பெரிய மனதை காட்டுகிறது. ஹரிவன்ஷ் ஜியை வாழ்த்துவதில் இந்திய மக்களுடன் நானும் இணைகிறேன்.
கவுரவம்
பீகார் மாநிலம் ஜனநாயகத்தின் மதிப்புகளை, மாண்புகளை பல நூற்றாண்டுகளாக நமக்கு உணர்த்தி வருகிறது. அந்த வரிசையில் பீகார் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஹரிவன்ஷ் சிங் இன்று காலை நடந்து கொண்டுள்ளார். ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொரு இந்தியரையும் அவர் கவுரவப்படுத்தி உள்ளார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்
பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ஹரிவன்ஷ் சிங் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அங்கும் மோடி ஒரு ட்விஸ்ட் வைத்து அந்த மாநில மக்களின் வாக்குகளை பெறுவதற்கு தவறவில்லை என்று சமூக வலைதளைங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.