கொரோனாவை ஒழிக்க மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் - மோடி வலியுறுத்தல்
கொரோனா பரிசோதனை, தொற்றுக்கு ஆளாகிறவர்களை கண்டறிதல், சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் மாநில அரசுகள் தங்களது கவனத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
டெல்லி: தேசிய பேரிடர் நிவாரண நிதியை மாநில அரசுகள் பயன்படுத்துவதற்கான உச்ச வரம்பு 35 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்த நிதியை உரிய முறையில் பயன்படுத்தி, கொரோனாவை விரைவில் ஒழிக்க மாநில அரசுகள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் 83,347 புதிய பாதிப்புகளுடன் 56 லட்சத்தை கடந்துவிட்டது, அதே நேரத்தில் 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்க தளர்வுகள் அமலில் உள்ளன. அடுத்தகட்ட தளர்வுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கொரோனா பரவல் தடுப்பு தொடர் நடவடிக்கைகள் குறித்து டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி 1 அல்லது 2 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்துவது பற்றிய செயல்திறனை மாநிலங்கள் மதிப்பிட வேண்டும் என்று தெரிவித்தார்.
கொரோனா பாதித்த மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி உயிரிழப்பு
7 மாநிலங்களில் பாதிப்பு அதிகம்
நாட்டில் மொத்தம் 700 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 60 மாவட்டங்களில்தான் கொரோனா தொற்று இன்னமும் தீவிரமாக உள்ளது. இந்த மாவட்டங்களைச் சேர்நத மக்களுக்கு கொரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை காணொலிகாட்சி மூலம் ஒரு வாரத்துக்கு நடத்த வேண்டும்.
கொரோனா நோயின் தீவிரம்
எந்த அறிகுறியும் இல்லாதவர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படும் நிலை உள்ளதால், பொதுமக்கள் இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்து, தொடர்ந்து தற்காப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்.
மாநில அரசுகள் கவனம்
கொரோனா பரிசோதனை, தொற்றுக்கு ஆளாகிறவர்களை கண்டறிதல், சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் மாநில அரசுகள் தங்களது கவனத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
தேசிய பேரிடர் நிதி உச்சவரம்பு உயர்வு
கொரோனா பரவல் காலமாக இருப்பதால் தேசிய பேரிடர் நிவாரண நிதியை மாநில அரசுகள் பயன்படுத்துவதற்கான உச்ச வரம்பு 35 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. இந்த நிதியை உரிய முறையில் பயன்படுத்தி, கொரோனாவை விரைவில் ஒழிக்க மாநில அரசுகள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.