வாரிசு அரசியல் ஒரு விஷ செடி.. பிடுங்கி எறியுங்கள்.. இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!
டெல்லி: வாரிசு அரசியல் நாட்டின் முன் உள்ள ஒரு மிகப்பெரிய சவால், அதை இளைஞர்கள் பிடுங்கி எறிய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குடும்பப்பெயரின் உதவியுடன் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் நாட்கள் முடிந்துவிட்டது என அவர் காங்கிரசை கடுமையாக தாக்கினார்.
இன்று அனைத்துமே மாறி விட்டது. நேர்மையான மக்களும் அரசியலில் ஒரு வாய்ப்பைப் பெறுகிறார்கள் என்றும் பிரதமர் கூறினார்.
பிரதமர் மோடி பேச்சு
டெல்லியில் இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். அப்போது அவர் வாரிசு அரசியல் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை தாக்கி பேசியதாவது:- நாட்டில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியதுள்ளன. இந்த மாற்றங்களை நாட்டின் இளைஞர்கள் கொண்டு வர வேண்டும். வாரிசு அரசியல் என்பது நாட்டின் முன் உள்ள ஒரு மிகப்பெரிய சவால், அந்த விஷ செடியை இளைஞர்கள் பிடுங்கி எறிய வேண்டும். தற்போது குடும்பப்பெயரின் உதவியுடன் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் நாட்கள் முடிந்துவிட்டது. ஆனால் இந்த வம்ச நோய் முற்றிலும் அழிக்கப்படவில்லை.
நானும் எனது குடும்பமும்
வாரிசு அரசியல் 'தேசத்துக்குதான் முதல் முன்னுரிமை' என்ற தத்துவத்திற்கு பதிலாக 'நானும் எனது குடும்பமும்' என்ற தத்துவத்தை மட்டுமே ஊக்குவிக்கிறது. இந்த வகை அரசியல் சமூக ஊழலுக்குப் ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
திறமையின்மையை ஊக்குவிக்கிறது
இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களின் கருத்துக்கள், அவர்களுடைய நெறிமுறைகள், அவர்களுடைய குறிக்கோள்கள் அனைத்துமே தங்கள் குடும்பத்தின் அரசியலையும், அரசியலில் இருந்து அவர்களது குடும்பத்தையும் காப்பாற்றுவதாகும். இதுபோன்ற அரசியல் முறை சர்வாதிகாரத்துடன் ஜனநாயகத்தில் திறமையின்மையை ஊக்குவிக்கிறது.
அரசியல் சொல் மோசம்
இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்கள் வழிதவறிச் சென்று விடுவார்கள் என்ற கருத்து முன்பு குடும்பங்களில் இருந்தது. அப்போது 'அரசியல்' என்ற சொல் சண்டை, சிக்கல், கொள்ளை மற்றும் ஊழல் ஆகியவற்றுக்கு ஒத்ததாக மாறியது. ஆனால் இன்று அனைத்துமே மாறி விட்டது. நேர்மையான மக்களும் இன்று அரசியலில் ஒரு வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
கட்டாய நிபந்தனை
நேர்மை மற்றும் செயல்திறன் இன்று அரசியலின் கட்டாய நிபந்தனையாக மாறி வருகிறது. ஒரு குடும்ப பாரம்பரியத்தை(குடும்ப அரசியல்) கொண்டிருந்தவர்களின் ஊழல் இன்று அவர்களுக்கு ஒரு சுமையாகிவிட்டது. அவர்கள் தவறான முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் அவர்களால் மீண்டும் ஒரு உறுதியான நிலையைப் பெற முடியவில்லை என்று பிரதமர் மோடி பேசினார்.