ராணுவ பீரங்கி வாகனத்தில் மோடி.. குடியரசு தின அணிவகுப்புக்கும் தலைமை ஏற்று நடத்துங்க..யஷ்வந்த் சின்ஹா
டெல்லி: ராஜஸ்தானில் ராணுவ பீரங்கி வாகனத்தில் பவனி வந்தது போல குடியரசு தின அணிவகுப்புக்கும் பிரதமர் மோடி தலைமை ஏற்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்சல்மர் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி நேற்று தீபாவளி கொண்டாடினார். லாங்கேவாலா பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது பீரங்கி வாகனத்தில் பிரதமர் மோடி பவனி வந்தார்.
அப்போது ராணுவ வீரர்கள் இருபுறமும் நின்று உற்சாகமாக கையை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ராணுவ பீரங்கி வாகனத்தில் போருக்கு போவது போல பிரதமர் மோடி வலம் வந்ததற்க்கு பாராட்டுகள். நாட்டின் ராணுவ வீரர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்தையும் பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை உற்சாகப்படுத்தி உள்ளது.
இதேபோல் அடுத்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்புக்கும் பிரதமர் மோடி தலைமை ஏற்று நடத்த வேண்டும் இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா பதிவிட்டுள்ளார்.