சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவிற்குள் ஈர்க்க மோடி கொடுத்த சிக்னல்
டெல்லி: நாட்டில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது நாட்டில் முதலீடுகளை அதிகரிப்பதற்கும், சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்த்து இந்தியாவுக்குள் கொண்டுவருவதற்கும் கூட்டத்தில் ஊக்கம் அளித்தார்.
Recommended Video
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி மிக அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் உத்தரவுப்படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் பங்கேற்பு
இதையடுத்து சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதுடன் உள்நாட்டிலும் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாக பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி ஊக்கம்
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்த பின்னர் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி தளத்தை சீனாவிற்கு இருந்து வேறு நாடுகளுக்கு மாற்றும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.அப்படி வெளியேற விரும்பும் நிறுவனங்கள், வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கான திட்டங்களை உருவாக்குமாறு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு ஊக்கம் அளித்தார். அத்துடன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும் நேற்று ஆலோசனை தெரிவித்தார்.
விரைவான தீர்வு
இந்தக் கூட்டத்தில் முதலீடுகள் உடனே வந்து சேரவும், உடனடியாக பயன் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு வேகமாக தீர்வு காண நடவடிக்கை எடுக் வேண்டும் என்றும், தேவையான ஒப்புதல்களை உடனுக்குடன் அளிக்க வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
தொழில்துறை ஊக்கம்
தொழில்துறை ஊக்கம் பெறவும், தொழில்துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினார்.
சீனாவுக்கு பிரச்சனை
சீனாவில் தொழிலாளர்களுக்கான ஊதியம் கடுமையாக அதிகரிப்பு பிரச்னையால் ஏற்கனவே பல பன்னாட்டு நிறுவனங்களை உற்பத்தி தளங்களை வேறு நாட்டிற்கு மாற்றலாமா என்று யோசித்து வந்தன. இந்தியா அந்த நிறுவனங்களை தங்கள் நாட்டிற்குள் கவர்ந்து இழுக்க வேகம் காட்டி வந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு பிறகு சீனா விநியோக சந்தையில் உலகளாவிய ஆதிக்கம் செலுத்துவது சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.
சீன நிறுவனங்களை ஈர்க்க
இதனால் ஏராளமான நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்த இந்தியா விரும்புகிறது. ஏற்கனவே தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு ஒற்றை சாளர முறை திட்டத்தில் உடனே அனுமதி வழங்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலத்தில் தொழில் தொடங்க மத்திய அரசு உடனே அனுமதி அளிக்கிறது. பல்வேறு மாநிலங்களும் முதலீட்டாளர்களை ஈர்க்க குழு அமைத்து செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசும் சீனா உள்பட வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு வர குழு அமைத்துள்ளது.