வேலையை தொடங்கினார் மோடி... வெளிநாட்டு தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை
டெல்லி: நரேந்திர மோடி பதவியேற்றவுடன், தனது வேலையை தொடங்கி உள்ளார். இன்று காலை முதல் வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
நடைபெற்று முடிந்த 17வது நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறது. மோடியுடன், அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிரிதி இரானி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதே நேரம், வங்க தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான், கிர்கிஸ்தான், மொரிஷியஸ், கஜகஸ்தான் உள்பட 14 நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பதவி ஏற்பு விழா முடிந்த கையோடு நேற்றிரவு 10:15 மணி அளவில், குடியரசுத் தலைவர் மாளிகையில் கிர்கிஸ் நாட்டு அதிபர் சூரோன்பே ஜூன்பெக்காவை சந்தித்து பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
மோடியை டாடி டாடி என்று கூப்பிட்ட அதிமுகவினர்... ஒரு அமைச்சர் பதவி கூட தராமல் புறக்கணித்த பரிதாபம்!
இன்று காலை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் வங்கதேச அதிபர் முகமது அப்துல் ஹமீத்தை காலையில் சந்தித்துப் பேசினார் மோடி. அதனைத் தொடர்ந்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாளப் பிரதமர் கே.பி. ஒலி ஷர்மா, மற்றும் பூடான் பிரதமர் டாக்டர் லோட்டாய் டிஷேரிங் ஆகியோரையும் சந்தித்து மோடி உரையாடினார்.
மேலும், பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு நாட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். வருகிற 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அவர் மாலத்தீவு பயணத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் செல்வார் என்று தெரிய வந்துள்ளது. அப்போது, இலங்கையில் இந்தியா மேற்கொண்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் பிரதமர் மோடி ஆய்வு செய்வார் எனவும் கூறப்படுகிறது.