2-வது கட்டத்தில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்
டெல்லி: 2-வது கட்டத்தில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா மரணங்களில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துவிட்டது.
கடந்த 16-ந் தேதி முதல், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இதில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படவில்லை; ஆகையால் அதனை பயன்படுத்த கூடாது என்கிற சர்ச்சையும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் 2-வது கட்டத்தில் பிரதமர் மோடி, மாநிலங்களின் முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் 50-வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும் 2-வது கட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும்.