கொல்லப் போறாங்க.. தாவ போறாங்க.. ஜாதி பார்க்கிறாங்க... மோடி என்ன இப்படி இறங்கிட்டாரு.. தோல்வி பயமா?
Recommended Video
டெல்லி: நாட்டின் பிரதமர் பதவி வகிக்கும் மோடி 'தரலோக்கல்' அரசியல்வாதி அளவுக்கு தேர்தல் பொதுக்கூட்டங்களில் பேசிவருவது தோல்வி பயத்தைத்தான் வெளிப்படுத்துகிறதே தவிர அந்த பதவிக்குரிய கண்ணியத்தை காப்பாற்றுவதாக இல்லை என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்துவிட்டன. மே 23-ந் தேதி வெளியாகப் போகும் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
இத்தேர்தல் களத்தில் பிரதமர் மோடி கண்ணீரும் கம்பலையுமாகத்தான் தொடர்ந்து பேசி வருகிறார். இதன் உச்சகட்டமாக தம்மை கொல்ல காங்கிரஸ் கட்சியினர் கனவு காண்கிறார்கள் என்றெல்லாம் உருகிக் கொட்டியிருக்கிறார்.
அகிலேஷ்-மாயா கூட்டணிக்கு அமோக ஆதரவு... பிரியங்கா தேற மாட்டாராம்... பாஜக கதி? கருத்து கணிப்பு
தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி 'உதிர்த்த' கண்ணீர் முத்துகள்:
- என்னை கொலை செய்ய காங்கிரஸ் கட்சியினர் கனவு காண்கின்றனர்
- என்னை பார்க்கும் போது எதிர்க்கட்சிகளுக்கு ரத்த கொதிப்பு வருகிறது
- பலவீனமான அரசு அமைய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், பாகிஸ்தானும் விரும்புகின்றன
- 4-ம் கட்ட தேர்தலுக்குப் பின் எதிர்க்கட்சிகள் தூக்கம் இழந்துவிட்டன
- நான் சாதியை வைத்து அரசியல் செய்பவன் அல்ல
- பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் என்னை கேலி செய்கிறார்
- நான் உயிரோடு இருக்கும்வரை இட ஒதுக்கீட்டில் யாரும் கை வைக்க முடியாது
- நான் எம்.எல்.ஏ. ஆகும் வரை வங்கிக் கணக்கே வைத்துக் கொண்டதே இல்லை
- இன்னும் 5 ஆண்டுகள் கொடுத்தால் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் வந்தே தீரும்
- திரிணாமுல் கட்சியின் 40 எம்.பிக்களுடன் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.. மே 23-க்குப் பின் மமதாவுக்கு அழிவுதான்.
இப்படி உருக்கமாக அழுது புரண்டு பேசினால் அனுதாபம் வாக்குகளாக அறுவடையாகும் என கனவு காண்கிறார் நமது மாண்புமிகு பாரத பிரதமர்.
ஆனால் சாமானிய மக்களோ, இதெல்லாம் இருக்கட்டும் என்பதோடு எழுப்புகிற கேள்விகள்..
- பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதம் ஒழிந்ததா?
- மாவோயிஸ்டுகள் 400 ராணுவ வீரர்களை 5 ஆன்டுகளில் கொலை செய்திருக்கிறார்களே?
- புல்வாமா பகுதியில் மரங்களைத்தானே ராணுவம் வெட்டியதாக பாகிஸ்தான் கூறுகிறதே?
- தீவிரவாதத்தை ஒழிக்காமல் இலங்கை பயங்கரவாதம் குறித்து தொடர்ந்து பேசுகிறீர்களே?
- விண்ணை முட்டும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை உண்டா?
- 5 ஆண்டுகாலத்தில் சாதித்த சாதனைகள் என்று பட்டியல் ஏதாவது உண்டா?
- 5 ஆண்டுகள் அறிவித்ததில் நடைமுறைக்கு வந்த அறிவிப்பு என ஏதேனும் இருக்கிறதா?
இவற்றுக்கு பிரதமர் மோடியிடம் ஒரு பதிலும் இல்லை. அதனால்தான் 'வெறும் காற்றுதான் வருகிறது' கதையாக வெறும் கதறல் மட்டும் மேடைகளில் எதிரொலிக்கிறது.
5 ஆண்டுகாலத்தில் ஆக்கப்பூர்வமான எந்த ஒரு செயல்பாடும் இல்லாமல் நாட்டின் சிறு குறு தொழில்களை நாசமாக்கிவிட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு வெளியுறவுக் கொள்கையை தொலைத்துவிட்டு இப்போது தேர்தல் களத்தில் குய்யோ முறையோ என கூப்பாடு போட்டால் அதை நம்பி ஓட்டு போடுவார்கள் என 2019-லும் பிரதமர் மோடி நம்புவார் எனில் 'ஜனநாயகம் "நன்றாகவே" வாழ்ந்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.