சிபிஐ இயக்குநர் - துணை இயக்குநர் மோதல்.. இருவரையும் நேரில் ஆஜராக மோடி உத்தரவு
சிபிஐ இயக்குனர்களுக்கு சம்மன் அனுப்ப பிரதமர் மோடி உத்திரவிட்டுள்ளார்.
Recommended Video
டெல்லி: சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும், துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே ஏற்பட்டு வரும் மோதல் குறித்து பிரதமர் மோடி இரு அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் மிக மிக புலனாய்வு ஏஜென்சி சிபிஐ. மக்களுக்கு எப்போதுமே பலத்தையும், நம்பிக்கையையும் தரக்கூடிய விசாரணை அணைப்பு. இதன் இயக்குனர்தான் அலோக் வர்மா. சிபிஐ துணை இயக்குனர் ராகேஷ் அஸ்தனா.
அதிகார சண்டை
முக்கிய பொறுப்பை வகித்து வரும் இவர்களையும் 'லோக்கல் பாலிடிக்ஸ்' விட்டு வைக்கவில்லை. இருவருக்கும் இடையில் அதிகார சண்டை நடப்பதாக கூறப்பட்டு வந்தது. இதில் ஒரு கட்டத்தில், இதில் துணை இயக்குனரான ராகேஷ், தனது உயர் மற்றும் மூத்த அதிகாரியான அலோக் வர்மா பற்றி பல்வேறு புகார்களை பட்டியலிட்டு, அதை மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்துவிட்டார்.
ஊழல் புகார்
மற்றொரு பக்கம், ரூ.3 கோடி லஞ்சம் பெற்றதாக ஒரு வழக்கில் வழக்கில் ராகேஷ் அஸ்தானாவை சிபிஐ வழக்குப்பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி ஒரு சிபிஐ துணை இயக்குனர் மீதே லஞ்ச புகார் சொல்லப்பட்டு, எஃப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பகிரங்க விமர்சனம்
இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க துவங்கின. கடுமையாக விமர்சனங்களும் வீச தொடங்கி இருக்கின்றன. அரசியல் பழி வாங்குதலுக்காக சிபிஐ அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருகிறார் என்று ராகுல் காந்தி பகிரங்கமாகவே விமர்சித்தார். இதையடுத்து மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார்.
இருவருக்கும் சம்மன்
சிபிஐ விவகாரத்தில் எந்த தவறு ஏற்பட்டாலும் அது மத்திய அரசுக்கு இழுக்காகவே அமையும் என்பதை மோடி உணர்ந்திருக்கிறார். எனவே சிபிஐ இயக்குநருக்கும், சிபிஐ துணை இயக்குநருக்கும் இடையே நடக்கும் பிரச்சனை என்ன, நடந்த விவரங்கள் உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார். அதற்காக இது சம்பந்தமான முழுமையான அறிக்கை வேண்டும் என கேட்டுள்ளார். இதற்காக சிபிஐ இயக்குநர் அலோக் குமாருக்கும், துணை இயக்குநர் ராகேஷூக்கும் சம்மன் அனுப்பி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.