தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள்.. பிரிக்ஸ் மாநாட்டில் பாக்.கிற்கு மோடி அனுப்பிய மெசேஜ்.. பொளேர்!
டெல்லி: தீவிரவாதம்தான் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது, தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பேசி உள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று இணையவழி மாநாடு நடத்தப்பட்டது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்க நாட்டு தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
சீன அதிபர் ஜி ஜிங்பிங் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். இணைய வழி நடக்கும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி இந்த உரையில் தீவிரவாதம், அண்டை நாட்டு அச்சுறுத்தல் என்று பல விஷயங்கள் குறித்து பேசினார்.
என்ன சொன்னார்
பிரதமர் மோடி தனது உரையில், கொரோனாவிற்கு இடையிலும் பிரிக்ஸ் குழு சிறப்பாக செயல்படுகிறது.நாடுகளுக்கு இடையிலான உறவை பிரிக்ஸ் மேம்படுத்தி உள்ளது. நாடுகளுக்கு இடையிலான நட்பு பிரிக்ஸ் மூலம் வலிமையான நிலையை அடைந்துள்ளது.
ரஷ்யா
தீவிரவாதம்தான் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பு மூலம் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளில் பிரிக்ஸ் முன்னிலையில் உள்ளது.
திட்டம் என்ன
தீவிரவாதத்திற்கு எதிராக ரஷ்யா சிறப்பாக செயல்பட்டுள்ளது.ரஷ்யாவின் தலைமையில் பிரிக்ஸ் சிறப்பாக இயங்கி வருகிறது. ரஷ்யாவை போலவே பிரிக்ஸ் கூட்டமைப்பை இந்தியாவும் வழி நடத்தும்.
தீவிரவாதம்
உலக நாடுகளுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை தீவிரவாதம்தான். தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். முறையான திட்டங்களை இதற்காக பிரிக்ஸ் அமைப்பு வகுக்க வேண்டும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி, வலிமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகளை ஒன்று திரட்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு அமைந்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் ஒற்றுமை கொரோனாவிற்கு பின் அதிக அவசியம் என்ற நிலையில்.. இந்த நாடுகளை எல்லாம் பாகிஸ்தானுக்கு எதிராக திரட்டும் வகையில் பிரதமர் மோடி பேசி உள்ளார்.