ஒடிசா அமைச்சர் நபா தாஸ் மறைவால் வேதனை.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
ஒடிசா அமைச்சர் நபா தாஸின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மறைவையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஒடிசா அமைச்சர் நபா தாஸின் மறைவு வருத்தமளிக்கிறது. நபா தாஸின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நபா தாஸின் துரதிருஷ்டவசமான மரணம் ஆழ்ந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நபா தாஸ் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நபா தாஸ் மறைவு பற்றிக் கேள்விப்பட்டதுமே ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மருத்துவமனைக்கு நேரில் சென்று நபா தாஸின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சொந்தமாக 140 கார்கள்.. கோடீஸ்வர அமைச்சர்.. பாதுகாப்பு அதிகாரியாலேயே பலி.. யார் இந்த நபா கிஷோர் தாஸ்?
ஒடிசா அமைச்சர்
ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. நவீன் பட்நாயக் அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். இவர், ஜார்சுகுடா மாவட்டம் பிரச்ராஜ் நகரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க சென்றிருந்தார். அப்போது, காரில் இருந்து இறங்கிய அமைச்சர் நபா கிஷோர் தாஸை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் என்பவர் துப்பாக்கியால் சுட்டார்.
நபா தாஸ் பலி
இதில் 2 குண்டுகள் மார்பில் பாய்ந்ததில் அமைச்சர் நபா கிஷோர் தாஸ் நிலை குலைந்து கீழே சரிந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமானதையடுத்து, விமானத்தின் மூலம் புவனேஸ்வருக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மோடி இரங்கல்
அமைச்சர் நபா தாஸ் மறைவையடுத்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்கள் நபா தாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒடிசா அமைச்சர் நபா தாஸின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், " ஒடிசா அமைச்சர் நபா தாஸின் மறைவு வருத்தமளிக்கிறது. அமைச்சர் நபா தாஸின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார். "நபா தாஸின் துரதிருஷ்டவசமான மரணம் ஆழ்ந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நபா தாஸ் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்" என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.