நீலகிரி ராதிகா சாஸ்திரியின் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை- மன்கிபாத் வானொலி உரையில் பிரதமர் மோடி பாராட்டு
டெல்லி: தமிழகத்தின் நீலகிரியில் மலை பகுதி மக்களுக்காக இலவசமாக ஆட்டோ ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வரும் சமூக ஆர்வலர் ராதிகா சாஸ்திரிக்கு மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி முதல் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று பிரதமர் மோடி 79வது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.
கடந்த 2 ஆண்டுகளில் பொதுவாக கொரோனா பரவல், அதை கட்டுப்படுத்துவது, கொரோனா தடுப்பூசி போடுவது உள்ளிட்டவைகள் குறித்து பிரதமர் மோடி மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் விவரிப்பார். அதேபோல் ஒவ்வொரு மன்கிபாத் உரையிலும் தமிழ் மொழியின் சிறப்பு குறித்தும் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்
மேலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுடன் வானொலி நிகழ்ச்சி மூலமாக பிரதமர் மோடி உரையாடுவார். தற்போது கொரோனா 2-வது அலை ஓய்ந்து பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. அதேபோல் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றன. தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
டோக்கியோ ஒலிம்பிக்
இந்த நிலையில் இன்று தமது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் சாதித்து வருவது நம்மை பெருமை அடைய வைக்கின்றன. இந்திய வீரர்கள் அனைவரையும் நாம் உற்சாகப்படுத்த வேண்டும்.
கார்கில் தினம்
1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்தில் நாம் வெற்றி பெற்ற நாள் ஜூலை 26. கார்கில் யுத்தத்தில் உயிர் நீத்த நமது வீரர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்துவோம். தேசிய கைத்தறி நாளும் கொண்டாடப்பட உள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் கைத்தறி பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும். மன்கிபாத் வானொலி நிகழ்ச்சிக்கு ஆலோசனை வழங்குபவர்களில் 75% பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
நீலகிரி ராதிகாவுக்கு பாராட்டு
மேலும் ஆந்திரா, இமாச்சல பிரதேசம், திரிபுரா, மணிப்பூர் மாநிலங்களில் விவசாயிகள் மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி பாராட்டினார். தமிழகத்தின் நீலகிரியில் ராதிகா சாஸ்திரி என்பவர் மலை பகுதி மக்களுக்கு ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையாற்றுவதற்கும் பிரதமர் மோடி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
ராதிகாவின் ஆட்டோ ஆம்புலன்ஸ்
கொரோனா 2-வது அலை பாதிப்பின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு நாடு முழுவதும் ஏற்பட்டது. இதனை சமாளிக்க தன்னார்வலர்களும் களமிறங்கினர். நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ராதிகா சாஸ்திரி, பொதுமக்களிடம் நிதி திரட்டி 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்களை (ஆம்புரிக்ஷ்) ஏற்பாடு செய்தார். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இந்த ஆம்புலன்ஸ்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இலவசமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ராதிகா சாஸ்திரியின் இந்த சேவையைத்தான் பிரதமர் மோடி தமது மன்கிபாத் வானொலி உரையில் பாராட்டி உள்ளார்.