இந்தியா சுய சார்பாக மாறுவது அவசியம்.. தொழில் வர்த்தக சபை ஆண்டுவிழாவில் மோடி உரை
டெல்லி: உலகம் முழுக்க கொரோனாவுக்கு எதிராக மட்டும் போராடி வருகிறது, இந்தியா கொரோனாவோடு சேர்த்து, மேலும் பல்வேறு பிரச்சினைகளையும், சவால்களையும், எதிர்கொண்டு வருகிறது, ஆனால் நம்மிடம் ஒரு திருப்புமுனை மந்திரம் உள்ளது, என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்திய தொழில் வர்த்தக சபையின் 95 ஆவது ஆண்டு கூட்டத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக உரையாற்றினார்.
இந்திய தொழில் வர்த்தக சபையின் 95வது ஆண்டு கூட்டத்தில் இன்று காலை 11 மணிக்கு உரையாற்றினார் மோடி. அப்போது அவர் கூறியதாவது:
உலகம் கொரோனா வைரஸுடன் போராடுகிறது, இந்தியாவும் அதனுடன் போராடுகிறது. ஆனால் மற்ற பல சவால்களும் இந்தியாவுக்கு உள்ளன. வெள்ளம், வெட்டுக்கிளிகள், ஆலங்கட்டி மழை, எண்ணெய் கிணற்றில் தீ, சிறிய பூகம்பங்கள், இரண்டு புயல் போன்ற இவை அனைத்தையும் ஒன்றாக எதிர்த்துப் போராடுகிறோம்.
மக்கள் கைகளுக்கு நேரடியாக பணம் கொடுக்கலாம்.. மத்திய அரசு அதிரடி யோசனை.. அறிவிப்பு எப்போது?
விவசாயிகளுக்கு சுதந்திரம்
விவசாயிகளுக்கும் கிராமப்புற பொருளாதாரத்துக்குமான சமீபத்திய அரசின் அறிவிப்புகள் முக்கியமானவை. பல ஆண்டுகளாக அடிமைத்தனத்திலிருந்த விவசாய பொருளாதாரத்தை அரசின் அறிவிப்புகள் விடுவித்தன. இந்திய விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளை, நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்க சுதந்திரம் கிடைத்துள்ளது.
மேற்கு வங்கம் முக்கிய உற்பத்தியாளர்
இந்தியா இதுவரை, இறக்குமதி செய்து வரும் அதே பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். ஏற்றுமதியை உறுதிப்படுத்த நாம் விரைவாக உழைக்க வேண்டும். வட கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியை, கொல்கத்தா முன்னின்று வழிநடத்தலாம். பழைபடியும் கொல்கத்தா முக்கியமான தொழில்துறை மையமாக மாற வேண்டும். உற்பத்தித் துறையில் வங்காளத்தின் வரலாற்று சிறப்பை நாம் மீட்க வேண்டும். "வங்காளம் இன்று என்ன நினைக்கிறதோ, அதைத்தான் இந்தியா அடுத்த நாள் நினைக்கும்" என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறோம். மேற்கு வங்கத்தில் ஆரம்பித்து, நாம் உத்வேகம் பெற்று ஒன்றாக முன்னேற வேண்டும்.
நெருக்கடியை மாற்றும் மந்திரம்
இந்தியாவின் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண ஒற்றுமை மற்றும் வலிமை ஆகியவை அவசியம். இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாக மாற்ற இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தீர்மானித்துள்ளனர். இதை நாம் இந்த நாட்டுக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக மாற்ற வேண்டும். அந்த திருப்புமுனை என்ன? சுய சார்பு இந்தியா என்பதுதான் அந்த திருப்புமுனை. அனைத்து துறைகளிலும் சுய சார்பாக இருப்பதுதான், இந்தியாவை மீட்டெடுக்கும். விவசாயம், ராணுவ தளவாடம், நிலக்கரி என அத்தனையிலும் தற்சார்பு பெற்று, உலகத்திற்கு ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வருவதே சுய சார்பு. இதற்கான கட்டமைப்பை அரசு ஏற்படுத்திவிட்டது. இனி வேகமாக உழைப்பது மட்டுமே பாக்கியுள்ளது.
மக்களை மையப்படுத்திய திட்டங்கள்
மக்களை மையமாகக் கொண்ட, மக்கள் உந்துதல் மற்றும் வளர்ச்சி என்பது எங்கள் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வாய்ப்பை அங்கீகரிப்பதற்கும், முயற்சி செய்வதற்கும், புதிய உயரங்களை நோக்கிச் செல்வதற்கும் இதுவே நேரம். இவ்வாறு மோடி பேசினார்.
முன்னதாக ஜூன் 2ம் தேதி இந்திய தொழில்துறை கூட்டமைப்பின், (CII) 125வது ஆண்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக உரையாற்றினார். அப்போது அவர் இந்த உலகம் மிகவும் நம்பிக்கையான ஒரு கூட்டாளியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தை நிரப்புவதற்கு இந்தியாவுக்கு முழு தகுதி இருக்கிறது.
வளர்ச்சிப் பாதை
நம்மிடம் அதற்கான வலிமையும், திறமையும் உள்ளது. இந்தியா மீது உலகம் வைத்துள்ள நம்பிக்கையை நமது தொழில்துறை நிறுவனங்கள் சாதகமாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். வளர்ச்சி பாதைக்கு திரும்புவது என்பது மிகப்பெரிய கடினமான விஷயம் கிடையாது. இந்திய தொழில்துறை நிறுவனங்கள் சுய சார்பு கொண்டவை. ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை என்ற முத்திரை இப்போது நமக்குத் தேவையில்லை. உலகத்திற்காக உற்பத்தி செய்கிறோம் என்ற கோஷம் நமக்கு தேவை என்று அவர் கூறியிருந்தார்.