கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்: அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
டெல்லி: கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் உள்ளிட்டவை குறித்து இன்று நாடாளுமன்ற அனைத்து கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனாவின் பேரழிவு தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவில் நாள்தோறும் குறைந்தது 2 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. அமெரிக்காவில் கொரோனா மரணங்களும் அதிகரித்துள்ளன.
பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு நீடிக்கிறது. இந்தியாவில் பொதுவாக கொரோனா தாக்கம் சற்று தணிந்திருந்தாலும் சில மாநிலங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்துகளை நடைமுறைக்கு கொண்டு வருவதில் உலக நாடுகள் தீவிரமாக உள்ளது.
பிரிட்டனிலும் ரஷ்யாவிலும் கொரோனா தடுப்பு மருந்துகள் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட உள்ளது. இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு, விநியோகம் தொடர்பான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் மோடி இன்று கூட்டியுள்ளார். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் கொரோனா நிலவரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு மருந்து விநியோக நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கொரோனா பரவல் காலத்தில் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள 2-வது அனைத்து கட்சி கூட்டம் இது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத், ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.மேலும் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.