விவசாயிகள் வளமாக இருந்தால்தான் தேசம் வலிமையாக இருக்கும்- மோடி
டெல்லி: நாட்டின் விவசாயிகள் வளமாக இருந்தால்தான் தேசம் வலிமையாக இருக்கும் என்று மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் மன்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். கொரோனா, லாக்டவுன், சீனாவுடனான பிரச்சனைகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார்.
அத்துடன் ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பம்சங்களை குறிப்பிட்டு அதை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் போற்றுதலுக்குரிய செயல்களை மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியும் இருந்தார்.
இந்த வகையில் இன்று 69-வது வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்தியாவில் ஆதிகலாசாரங்களில் ஒன்றான கதை சொல்லுதல் குறித்து விவரித்தார் பிரதமர் மோடி. பின்னர் பெங்களூருவில் கதை சொல்லுதல் நிகழ்ச்சி நடத்தும் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
மேலும் நாட்டின் விவசாயிகள்தான் மத்திய அரசின் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் முதுகெலும்புகள். விவசாயிகள் வளமாக இருந்தால்தான் தேசம் வலிமையாக இருக்கும் என்றும் மோடி குறிப்பிட்டார்.