புதிய விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது: பிரதமர் மோடி
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய விவசாய சட்டங்கள், விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டு மக்களிடையே முற்பகல் 11 மணிக்கு உரையாற்றுகிறார். இந்த மன்கி பாத் நிகழ்ச்சியில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி கருத்துகளை முன்வைத்து வருகிறார்.
கொரோனா பரவல், கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சிகள் மூலம் அறிவுறுத்தல்களை விடுத்திருந்தார். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் முன்மாதிரியான செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியும் வருகிறார்.
டெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை!
அன்னபூரணி சிலை
இன்று முற்பகல் 11 மணிக்கு பிரதமர் மோடி மன்கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: கனடாவில் இருந்து மிகவும் பழமையான அன்னபூரணி தேவி சிலை மீட்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1913-ம் ஆண்டு இந்த சிலை திருடப்பட்டது. தற்போது இந்த சிலை திரும்பவும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது பெருமிதத்துக்குரிய தருணம். ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய தருணமும் கூட.
இந்தியாவின் கலாசார தூதர்கள்
இந்தியாவின் கலாசாரம் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்தியாவுக்கே பலர் வந்து இங்கே வந்து தங்கி வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கின்றனர். மேலும் பலர் இந்தியாவின் கலாசார தூதர்களாக சொந்த நாட்டுக்கு திரும்பியும் உள்ளனர்.
கோவையில் வேதம் கற்ற ஜோனஸ்
பிரேசிலை சேர்ந்த ஜோனஸ் மசேட்டி மெக்கானிக்கல் பொறியியல் பட்டதாரி; பங்கு சந்தையில் பணிபுரிந்த ஜோனஸ் இந்தியாவின் கலாசாரத்தின் பால் ஈர்க்கப்பட்டார்; இந்தியாவின் வேதங்கள் மீது அவருக்கு பற்றுதல் ஏற்பட்டது; தமிழகத்தின் கோவையில் ஆர்ஷ வித்யா குருகுலத்தில் 4 ஆண்டுகள் வேதங்களை கற்றார். ஜோனஸ் இப்போது விஸ்வநாத் என அழைக்கப்பட்டு வருகிறார். பிரேசிலில் ஒரு மலைப்பகுதியில் வேதங்களையும் பகவத் கீதையும் கற்று தருகிறார். விஸ்வவித்யா என்ற அமைப்பையும் ஜோனஸ் நடத்தி வருகிறார். நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இளம் எம்.பி. கவுரவ் சர்மா சமஸ்கிருதத்தில் பதவி பிராமணம் செய்தது பாராட்டுக்குரியது.
விவசாய சட்டங்களின் நன்மைகள்
விவசாய சீர்திருத்தங்களுக்கு நாடாளுமன்றம் சட்டப்பூர்வமான ஒப்புதல் அளித்துள்ளது. விவசாய சீர்திருத்தங்களானது புதிய உரிமைகளை விவசாயிகளுக்கு கொடுத்துள்ளது. விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. விவசாயம் சார்ந்த பணிகளில் புதிய பரிமாணங்களை ஏற்படுத்தி தந்துள்ளது. விவசாயிகளுக்கான புதிய வாயிற்கதவுகளை இந்த புதிய சட்டங்கள் திறந்துவிட்டிருக்கிறது. விவசாயம் சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவர்கள், இந்த சீர்திருத்தங்கள் தொடர்பாக விவசாயிகளிடம் விளக்க வேண்டும்.
கொரோனா- அலட்சியம் கூடாது
கொரோனா பாதிப்பு தொடங்கி ஓராண்டாகிவிட்டது. கொரோனா லாக்டவுனுக்குப் பின்னர் இப்போது கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பதில் மும்முரமாக இருக்கிறோம். இந்த விஷயத்தில் நாம் அலட்சியமாக இருந்தால் கொரோனா மிக மிக ஆபத்தானதாக இருக்கும். ஆகையால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.