துவண்டு கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த மோடி அதிரடி! பொருளாதார வல்லுநர்களுடன் மீட்டிங்
டெல்லி: நாட்டின் பொருளாதார பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர்மட்ட பொருளாதார வல்லுனர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவுவதாக வெளியாகும் எச்சரிக்கைகள் பின்னணியில், இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வளர்ச்சி அதிகரிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மீதான தடைகள் என்ன என்று விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு கொண்டு வருவது மற்றும் அதை உயர் வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்வது குறித்து முக்கியமாக இதில் ஆலோசிக்கப்பட்டது.
ஜூலை 5 ம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாராளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், மோடி கூட்டியுள்ள இந்த உயர்மட்டக் கூட்டம் கவனம் ஈர்த்தது.
இன்றைய கூட்டத்தில், பொருளாதார வல்லுநர்கள் பிரதமர் முன் விளக்கங்களை காட்சிப்படுத்தினர். இதையடுத்து பிரதமர் மோடி பட்ஜெட்டுக்கான திட்டங்கள் பற்றியும், விவாதித்தார். இந்த ஆண்டு பட்ஜெட், பொருளாதாரத்தை அதிக வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கும் வகையில் திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் (தனி அதிகாரம்) ராவ் இந்தர்ஜீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மற்றும் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
டெல்லியில் இன்று இரவு நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பிறகு, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நிதி ஆயோக் ஏற்பாடு செய்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 40 பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்கள் இதில் பங்கேற்றனர். பங்கேற்பாளர்கள், தங்கள் கருத்துக்களை ஷேர் செய்தனர். பேரியல் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம் மற்றும் நீர் ஆதாரம் குறித்தெல்லாம் ஆலோசித்தோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Had a fruitful interaction with economists and other experts on the themes of macro-economy and employment, agriculture and water resources, exports, education, and health.
— Narendra Modi (@narendramodi) June 22, 2019
The inputs received were insightful and will benefit our growth trajectory. pic.twitter.com/AXW7oXCHlm
மே 31ல், பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அப்போது, முதல் மூன்று மாத (2018-19 நிதியாண்டு) காலாண்டு வளர்ச்சி, தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து 5.8 சதவீதமாக இருப்பதாக அரசால் அறிவிக்கப்பட்டது. கடந்த 17 காலாண்டுகளிலேயே, பொருளாதாரம் இப்போதுதான் மிக மோசமான மந்த நிலையில் உள்ளது. 2018 கடைசி காலாண்டில் 6.6 சதவீதத்திலிருந்த பொருளாதார வளர்ச்சி இப்போது 5.8 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்த புள்ளி விவரத்தை வைத்து பார்க்கும்போது, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடு இந்தியா அல்ல; அது சீனா என்பது உறுதியாகியுள்ளது. சீனாவின், பொருளாதாரம், முதல் காலாண்டில் 6.4 சதவீத வளர்ச்சியைக் கொண்டுள்ளது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியா, சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்திற்கு பின்னால் வந்துள்ளது.
புள்ளியியல் துறை அமைச்சகம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில், வேலையின்மை விகிதம் 2017-18 ஆம் ஆண்டில் 6.1 சதவீதமாக இருந்தது என தெரிவித்தது. ஜனவரி மாதம் பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தித்தாளில் இதேபோன்ற ஒரு புள்ளி விவரம் கசிந்திருந்தது. அரசு வெளியிட்ட புள்ளி விவரம், அந்த நாளிதழில் வெளியான புள்ளிவிவரத்தை உறுதிப்படுத்தியது. 1972-73 முதல், இந்த அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்தது, இதுதான் முதல் முறையாகும்.