சமூக விலகல், கான்டாக்ட் டிரேசிங், தனிமைப்படுத்துதலில் கவனம் செலுத்துங்கள்.. மோடி
டெல்லி: இனி வரும் வாரங்களில் சமூக விலகல், கான்டாக்ட் டிரேசிங், தனிமைப்படுத்துதலில் கவனம் செலுத்துங்கள் என மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
Recommended Video
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை செய்தார். இன்று காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி முதல்வர்களுடனான ஆலோசனையில் கூறுகையில் லாக்டவுன் முடிவிற்கு ஆதரவு அளித்த மாநிலங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பரவலை தடுக்க அனைத்து மாநிலங்களும் இணைந்து செய்த பணி பாராட்டத்தக்கது.
மற்ற நாடுகளில் இரண்டாவது முறையாக கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நம் நாட்டில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை தடுக்க வேண்டும். இனி அடுத்தடுத்த வாரங்களில் கொரோனாவுக்கான சோதனை, கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தேவையான மருந்துகள் மருத்துவ பொருட்கள் விநியோகத்தை பராமரிப்பது மிகவும் அவசியம்.
கோவிட் 19 நோயாளிகளுக்கான தனி மருத்துவமனைகள், மருத்துவ வசதிகள் இருப்பதை அனைத்து மாநிலங்களும் உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆயுஷ் மருத்துவர்கள், பாரா மெடிக்கல் ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார்.
இந்தியாவில் இந்த காலகட்டம் அறுவடைக்கான நேரம், எனவே அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு லாக்டவுனில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனினும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். போர் களத்தில் இருப்பது போல் பணிபுரிவது கட்டாயமாகும். வைரஸ் எங்கிருந்து பரவுகிறது என்பதை கண்டறியுங்கள். அந்த இடத்தை சுற்றி வளையுங்கள். கொரோனா அந்த இடத்திலிருந்து வேறு எங்கு பரவாமல் தடுத்துவிடுங்கள். நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிப்பதும் அமைதியையும் நிலைநாட்டுவதும் அவசியமாகும்.
Prime Minister Narendra Modi holds meeting with Chief Ministers via video conferencing, on #COVID19 situation in the country. Home Minister Amit Shah & Defence Minister Rajnath Singh also present. pic.twitter.com/t0irTAXGc5
— ANI (@ANI) April 2, 2020
கொரோனா நம் நம்பிக்கையை தாக்கி வாழ்க்கையை அச்சுறுத்துகிறது. மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள், பஞ்சாயத்து அளவில் உள்ள சமூக நல அமைப்புகள் கொரோனாவுக்கு எதிரான போரில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டார்.
மேலும் லாக் டவுன் முடிந்தாலும் மக்கள் மொத்தமாக வெளியே வருவதை தடுக்க என்னென்ன மாதிரியான யுத்திகளை கையாளலாம் என்பதை வகுக்க வேண்டியது முக்கியமானது என மோடி அறிவுறுத்தினார். மேலும் கொரோனா பரவலைத் தடுக்க சமூக விலகலின் அவசியம் குறித்து அவர் மீண்டும் ஒரு முறை கூறினார்.
இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியதும் கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். அதற்கு முன்னதாக கடந்த மார்ச் 20-ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மோடி ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.