தேர்வு மட்டுமே வாழ்க்கையில்லை.. மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்.. கிரிக்கெட்டை உதாரணம் காட்டி உரை
Recommended Video
டெல்லி: பள்ளி இறுதித்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை உரையாடினார்.
டெல்லியிலுள்ள டால்காட்டோரா, அரங்கத்தில் 'பரிக்ஷா பெ சர்ச்சா 2020' என்ற பெயரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து 2000 பள்ளி மாணவர்கள் வரை கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 66 மாணாக்கர்களும் கூட பங்கேற்றுள்ளனர்.
இந்த 2000 மாணவர்களை கட்டுரைப் போட்டி மூலம் மனித வள அமைச்சகம் தேர்வு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது;
நான் தவறாமல் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன், ஆனால் பரிக்ஷா பெ சர்ச்சா திட்டம் என் இதயத்திற்கு மிக நெருக்கமாக உள்ளது. திறமையான மற்றும் படைப்பாற்றல் கொண்ட மாணவர்களுடன் உரையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
சந்திரயான்
தோல்விகள் வாழ்க்கையின் ஒரு பகுதி. "சந்திரயான் 2 விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சந்திரயான் 2 திட்டத்தின், தோல்வியால் நான் கூட கலக்கம் அடைந்தேன், ஆனால் பின்னர் நான் விஞ்ஞானிகளுடன் பேசச் சென்று அவர்களை ஊக்கப்படுத்தினேன். நமது தோல்விகளில் கூட வெற்றிக்கான படிப்பினைகளைக் காணலாம்.
அனில் கும்ப்ளே
கொல்கத்தாவில் இந்தியா vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை நினைவில் கொள்ளுங்கள். தோல்வி உறுதி என கூறப்பட்ட கட்டத்திலும், ராகுல் டிராவிட் மற்றும் லட்சுமணன் தீரமாக போராடி வெற்றியை ஈட்டித் தந்தனர். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியின் போது நமது பவுலர் அனில் கும்ப்ளே காயமடைந்தார். ஆனாலும், அவர் தனது தைரியத்தை விடவில்லை. தொடர்ந்து விளையாடினார். நாம் எப்படி சிக்கல்களை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் வெற்றி.
தேர்வே வாழ்க்கை இல்லை
தேர்வுகள் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். பொதுத் தேர்வு என்பது ஒருவரின் கல்வி பயணத்தில் ஒரு மைல்கல் ஆகும், ஆனால் நல்ல ரேங்குகளை பெறுவதில் மட்டுமே நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. பொதுத் தேர்வுகள் முக்கியமானதாக கருதப்பட வேண்டும், ஆனால் பரீட்சை மட்டுமே வாழ்க்கை கிடையாது.
கூடுதலாக செய்யுங்கள்
நமது முழு கல்வியும் எதையாவது கற்றுக்கொள்ள அல்லது செய்ய ஒரு வாய்ப்பை வழங்குகிறது. படிப்பை தாண்டி, எந்த ஒரு கூடுதல் செயலையும் செய்யாவிட்டால், நீங்கள் ஒரு ரோபோவைப் போல ஆகிவிடுவீர்கள். நாம் நமது நேரத்தை நிர்வகிக்க வேண்டும், கல்வியை தாண்டிய ஆர்வங்களில் கவனம் செலுத்துவதை நிறுத்தக்கூடாது. எங்கள் குழந்தைகள், Extra- curricular activities நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லிக்கொள்ள பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அது பேஷன் ஆகிவிட்டது.
தொழில்நுட்பம்
கடந்த நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளிலும், இந்த நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளிலும், வாழ்க்கை முறைகள், தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. நமது வேலையில் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். தொழில்நுட்பத்தால் நம் நேரத்தை திருட முடியாது, மாறாக தொழில்நுட்பத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு மோடி உரையாற்றினார்.