ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி!
டெல்லி: கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின்போது, சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.
சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, வரும் 13 மற்றும் 14 தேதிகளில் கிர்கிஸ்தான் நாட்டுத் தலைநகர் பிஷ்கெக் நகரில் நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேச இருப்பது உறுதியாகி இருக்கிறது.
சீன வெளியுறத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லூ காங் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில்," வரும் 12 முதல் 16ந் தேதி வரை கிர்கிஸ்தான் நாட்டிலுள்ள மாகாணங்களை அதிபர் ஜீ ஜின்பிங் பார்வையிட உள்ளார்.
அப்போது, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர். இது ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமையும்," என்று தெரிவித்துள்ளார். சீன அதிபருடன் பிரதமர் மோடியின் சந்திப்பை சீனாவுக்கு இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்துள்ளார்.
கடந்த ஆண்டு வெவ்வேறு நிகழ்ச்சிகளில் 4 முறை சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் 27 மற்றும் 28 தேதிகளில் நடந்த வூகன் மாநாட்டின்போது பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங்குடன் சந்தித்து பேசினார்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த சந்திப்புக்கு பின்னர்தான், இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள டோக்லாமில் 73 நாட்களாக முகாமிட்டிருந்த சீன ராணுவத்தினர் திரும்பி சென்றனர். போர் பதற்றமும் தணிந்தது. மேலும், வூகன் மாநாட்டிற்கு பிறகு இரு நாடுகளின் உறவை பரஸ்பரம் வலுப்படுத்தும் முயற்சிகளில் இந்தியாவும், சீனாவும் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி சீன அதிபருடன் சந்தித்து பேச இருப்பது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.