சவாலான காலகட்டம் இது.. இந்திய-ஐரோப்பிய உறவை பலப்படுத்துவது முக்கியமானது- உச்சி மாநாட்டில் மோடி உரை
டெல்லி: இந்தியாவும்-ஐரோப்பிய நாடுகளும் இயற்கையிலேயே கூட்டாளிகள் என்று, இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது உரையில் தெரிவித்தார்.
கொரோனா நெருக்கடியின் மத்தியில், இந்த பெரிய கூட்டம் வீடியோ கான்ஃபரன்சிங் அடிப்படையில் நடைபெற்றது.
இதில் மாலை 4.30 மணியளவில் மோடி உரையாற்றினார். அவர் பேசுகையில், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், நாம் இணைந்து உரையாட இதுபோன்ற வீடியோ கான்ஃபரன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இயற்கை கூட்டாளிகள்
இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இயற்கையான கூட்டாளிகள். உலகில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நமது கூட்டுறவு பயனுள்ளதாக இருக்கும்.
நமது உறவுகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை சார்ந்த திட்டங்களை கையில் எடுக்க வேண்டும். அதுவும் நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் செயல்படுத்தப்பட வேண்டும்.சவால்கள்
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை விரிவுபடுத்த நான் கடமைப்பட்டுள்ளேன், உறவுகளை அதிகரிக்க நீண்டகால முன்னோக்கு திட்டங்களை நாம் பின்பற்ற வேண்டும். நாம் ஒரு தொற்றுநோயை எதிர்கொண்டு போராடி வருகிறோம். பெரும் சவால்களை எதிர்கொள்கிறோம்.
ஐரோப்பிய உறவு முக்கியம்
இதுபோன்ற காலங்களில், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவு மிகவும் முக்கியமானது. நாம் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்க முடியும். நமது கவனம், நோய்த் தொற்று, பயங்கரவாதம் தொடர்பாக இருக்க வேண்டும். இவ்வாறு மோடி உரையாற்றினார்.
27 நாடுகளின் கூட்டமைப்பு
இந்தியா தனது பெரிய வர்த்தக பங்காளியான ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த மோடியின் முன்னெடுப்பால் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவின் 27 நாடுகளின் கூட்டமைப்புடன் நடைபெறும் இந்த கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் சீனாவின் ஆதிக்கம் குறித்து பேச இந்தியாவுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புலனாய்வு அமைப்புகள்
இந்த உச்சிமாநாட்டின் போது, இரு தரப்பினரும் சிபிஐ மற்றும் யூரோபோல் ஆகிய இரு நாட்டு புலனாய்வு அமைப்புகள் இடையேயான பயனுள்ள ஒத்துழைப்புக்கான ஒரு நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும், உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக ஐந்தாண்டு திட்டத்தை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகம்
கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதற்காக மோடி முன்னெடுப்புகளை துவங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டில் இந்தியக் குழு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், ஐரோப்பிய குழு, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் தலைமையிலும் பங்கேற்றுள்ளனர்.