ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி... ஜி -20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
டெல்லி: ஜப்பானில் நடக்கும் ஜி -20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
ஜப்பானின் ஒசாக்கா நகரில் வருகிற 28, 29-ந் தேதிகளில் ஜி -20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஜி - 20 நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
சுற்றுச்சூழல் மாற்றங்கள், வேலை வாய்ப்பு, பெண் தொழில் முனைவோர், போன்ற பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.
இதனை அறிவித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், 6-வது முறையாக பிரதமர் மோடி ஜி 20 மாநாட்டில் கலந்துக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜி-20 உச்சி மாநாடு முதல் முறையாக இந்தியாவில் 2022-ம் ஆண்டு நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கடந்தாண்டு டிசம்பரில், அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற 13-வது ஜி-20 மாநாட்டின் இறுதி நிகழ்வில் பேசும் போது, பிரதமர் மோடி இந்த தகவலை வெளியிட்டார். இந்த வாய்ப்பை விட்டு கொடுத்ததற்காக இத்தாலிக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.
இது தொடர்பாக, அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை 2022-ல் நிறைவு செய்கிறது. சிறப்பு மிக்க அந்த ஆண்டில் ஜி-20 நாடுகளின் தலைவர்களை வரவேற்பதற்கு இந்தியா ஆர்வமாக இருக்கிறது. உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்டிருக்கும் இந்தியாவுக்கு வாருங்கள். இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் பன்முகத்தன்மையை தெரிந்து கொள்வதுடன், அன்பான விருந்தோம்பலையும் உணர்ந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார் என்பது நினைவிற்குரியது.