துடிப்பான தமிழர்கள்.. பெருமை கொள்கிறோம்.. நாளை கோவையில் இருப்பேன் - பிரதமர் மோடி ட்வீட்
டெல்லி: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமை கொள்கிறது. பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நாளை கோயம்புத்தூரில் இருப்பேன் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video
பிரதமர் நரேந்திர மோடி, ஒருநாள் பயணமாக நாளை (பிப்.25) புதுச்சேரி மற்றும் கோவைக்கு வருகிறார். நாளை காலை டெல்லியில் இருந்து 7.45 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10.30க்கு சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி சென்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு, பிற்பகல் 2.10 மணிக்கு மீண்டும் சென்னை வந்து, அங்கிருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 3.35 மணிக்கு கோவை சென்றடைகிறார்.
பிறகு, விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு, அரசு விழா நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி அரங்குக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும் விழாவில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (என்எல்சி), கப்பல் போக்குவரத்துத் துறை, மின் துறை, தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதுமட்டுமின்றி, ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
ஜெயலலிதா பிறந்தநாள்: சசிகலா ஆட்டம் இன்றுமுதல் தொடங்குமா? உஷார் மோடில் அதிமுக
பிறகு, மாலை 5 மணி அளவில் கொடிசியா மைதானத்தில் பாஜக சார்பில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். கூட்டம் முடிந்தவுடன் காரில் கோவை விமான நிலையம் சென்று, தனி விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டரில், தனது கோவை வருகை குறித்து பதிவிட்டுள்ளார். அதில், "தேச வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது. தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமைப்படுகிறது. பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நாளை கோயம்புத்தூரில் இருப்பேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.