ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி உரை... சீனாவுக்கு கொட்டு வைப்பாரா!!
டெல்லி: ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றுகிறார். இதற்கு முன்னதாக நேற்று ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசி இருந்தார்.
நியூயார்க் நகரில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இன்று மாலை பிரதமர் மோடி பேசுகிறார். கொரோனா தொற்று காரணமாக முதன் முறையாக இந்தக் கூட்டம் ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தங்களது பேச்சை பதிவு செய்து வீடியோவாக ஒளிபரப்பி வருகின்றனர்.
இதன்படி பிரதமர் மோடியின் பேச்சும் ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 75வது ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உலகளாவிய தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது இந்தியாவின் தாரகமந்திரமாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று இருக்கும் தீவிரவாதிகளின் பெயர்களில் மாற்றங்கள் செய்வது பற்றி இந்தியா எடுத்துரைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும், சில தீவிரவாதிகளின் பெயரை சேர்க்குமாறு பரிந்துரைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பருவ நிலை மாற்றங்கள் குறித்தும் இந்தியா பேச முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்றுக்குப் பின்னர் மருத்துவத்தில் உலக நாடுகள் எந்தளவிற்கு இணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்தும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எஸ்.பி.பி. இழப்பால் இசையுலகம் ஏழையாகிவிட்டது... சோகத்தை பகிர்ந்த பிரதமர் மோடி..!
இதற்கு முன்னதாக ஐநா பொதுச்சபை கூட்டத்தில் நேற்று பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் பிரச்னையை எழுப்பியுள்ளார். இதற்கு ஐநாவுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி திருமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்லையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பதற்றம் ஏற்பட்டு இருக்கும் சூழலில் இதுகுறித்து ஐநாவில் பிரதமர் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.