ஜன. 6ல் பத்தனம்திட்டா வருகிறார் மோடி.. சபரிமலை விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும்!
பிரதமர் மோடி ஜனவரி 6 கேரளா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 6-ம் தேதி கேரளா வருகிறார். அப்போது சபரிமலை அமைந்துள்ள பத்தினம்திட்டாவில் பாஜகவினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் எந்த அளவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி பலம் பொருந்தி உள்ளதோ, அதே அளவுக்கு காங்கிரஸ் கட்சியும் உள்ளது.
இதில் கேரளாவில் பாஜகவை எப்படியேனும் கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இப்போதே அதற்கான வேலையை ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளது பாஜக.
ரேபரேலி
குறிப்பாக 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜக தலைமையிடத்தில் நிறையவே மாற்றம் தெரிகிறது. இதுவரை போகாத ரேபரேலிக்கு போய் நலத்திட்டத்தை ஆரம்பித்து வைத்துவிட்டு வந்தார் பிரதமர்.
ஜனவரி 6
அதேபோல, பாஜக பலவீனமாக உள்ள கேரளாவிற்கும் வருகிற ஜனவரி 6-ம் தேதி வர உள்ளார். இதற்கு முன்பு பலமுறை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கேரளா சென்று கட்சியை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பினும், பிரதமர் மோடி செல்ல உள்ளது கவனிக்கத்தக்கதாக கருதப்படுகிறது.
பத்தனம்திட்டா நகர்
ஏனெனில் இன்னும் சபரிமலை பஞ்சாயத்தும் இந்த மாநிலத்தில் தீரவில்லை. தொடர் போராட்டம், உண்ணாவிரதம் என தற்போது வரை நீண்டு வருகிறது. சபரிமலை விவகாரத்தை இந்து அமைப்புகள் கையில் எடுத்துள்ள நிலையில் மோடி கேரளா வர உள்ளதும், சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டா நகரில் உரையாற்ற உள்ளதும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கஜா புயல்
கஜா புயலால் பல உயிர்கள் பறிபோயும், எதிர்கால வாழ்வை எத்தனையோ பேர் இழந்த நிலையிலும், அரசியல் கட்சி தலைவர்கள் பலவித கண்டனங்களை தெரிவித்தும் தமிழகம் பக்கமே வராமல் இருக்கிறார் மோடி.
உற்சாகமாகி உள்ளனர்
ஆனால் கேரளாவில் எப்படியாவது எம்பி இடங்களை கணிசமாக பெற அங்கு கிளம்பி போக உள்ளது தமிழகம் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் பிரதமர் மோடியின் வருகை அறிவிக்கப்பட்டுள்ளதால் கேரள மாநில பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாகி உள்ளனர்.