அடடே.. அத்வானி வீட்டுக்கே சென்று ரோஜா பூ கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மோடி!
டெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 91வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, அவரது இல்லத்திற்கே சென்று ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
பாஜகவின் ஆரம்ப காலத்திலிருந்து உறுப்பினராக உள்ளவர் அத்வானி. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, துணை பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் என்று முக்கியமான துறைகளை வகித்து வந்தவர், பாஜகவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்ட கூடிய அத்வானி.
2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு பதவிக்கு வந்தபோது, அத்வானிக்கு, கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக ஓய்வு அளிக்கப்பட்டது. வழிகாட்டும் குழு என்ற ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஆனால் இதுவரை அந்தக் குழு ஒருநாள் கூட கூடியதாகவோ, அரசுக்கு வழிகாட்டியதாகவோ தகவலே கிடையாது. தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார் அத்வானி. பொது விழாக்களில், அத்வானி வணக்கம் சொன்னால் கூட, பதிலுக்கு மோடி வணக்கம் தெரிவிக்கவில்லை என்றெல்லாம் அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Went to Advani Ji’s residence and wished him on his birthday. pic.twitter.com/4We9Tp8Qui
— Narendra Modi (@narendramodi) November 8, 2018
இந்த நிலையில்தான் அத்வானியின் இல்லத்திற்கே பிரதமர் மோடி இன்று சென்று, அவருக்கு ரோஜா பூ கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு வந்துள்ளார். மேலும் ட்விட்டரிலும், மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.