இந்த முறை நீண்ட நெடிய உரையில்லை... 16 நிமிடம் மட்டுமே பேசிய பிரதமர் மோடி
டெல்லி: நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி 16 நிமிடங்களில் தனது பேச்சை முடித்துக்கொண்டு அதற்குள் தான் சொல்ல நினைத்த கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
வழக்கமாக மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினால் குறைந்தது அரை மணி நேரமாவது தனது கருத்துக்களை எடுத்துரைக்க நேரம் எடுத்துக்கொள்வார்.
ஆனால் இந்த முறை முற்றிலும் மாறுபட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்து விரைந்து தனது உரையை முடித்துக்கொண்டார்.
கவனிச்சீங்களா.. அந்த பக்கம் சீனா, இந்த பக்கம் கொரோனா.. தில்லா மீசையை முறுக்கிவிட்டு பேசிய மோடி.. செம
மக்கள் மத்தியில் உரை
பிரதமர் மோடியை பொறுத்தவரை மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்ட எந்த முக்கிய முடிவுகள், அறிவிப்புகள் என எதுவாக இருந்தாலும் அதனை அதிகாரிகள் மூலம் அறிக்கையாக வெளியிடாமல், தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் தோன்றி அதனை தாமே வெளியிடுவார். பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார் என்றாலே முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்பது ஊடகவியலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரது எண்ணமாகவும் மாறிவிட்டது.
நேரடியாக
அந்த வகையில் லாக்டவுன் தளர்வு குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் இன்று மாலை தொலைக்காட்சி மூலம் மக்களிடையே உரையாற்றினார் பிரதமர் மோடி. 4.01-க்கு தொடங்கிய பிரதமரின் உரை மிகச்சரியாக 4.17-க்கு நிறைவடைந்தது. இன்னும் சில நிமிடங்கள் பேசுவார், ஏதேனும் பெரிய அறிவிப்புகள் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உடைந்தது. 16 நிமிடங்கள் மட்டுமே பேசினாலும், மக்களுக்கு கூற வந்த விஷயங்களை நேரடியாக கூறிவிட்டார் பிரதமர் மோடி.
பணமதிப்பிழப்பு
இதனிடையே பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றப் போகிறார் என்றாலே மக்களுக்கு நினைவுக்கு வருவது பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஊரடங்கு அறிவிப்பும் தான். மன் கீ பாத் என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றும் பிரதமர் மோடி, அப்போது முக்கிய அறிவிப்புகள் எதையும் வெளியிட்டதில்லை. பொதுவாக குடியரசுத் தினம், சுதந்திரத் தினத்தின் போது முந்தைய பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றுவார்கள்.
பிரதமர் அறிவிப்பு
ஆனால் பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் எந்த ஒரு முக்கிய விவகாரங்களாக இருந்தாலும் அதனை தாமே மக்களுக்கு அறிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவரது நடவடிக்கை தொடக்கத்தில் புதுமையாக தெரிந்தாலும், நாளடைவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.