பிரதமர் மோடி பாகிஸ்தான் வான் வெளியை பயன்படுத்தமாட்டார்: வெளியுறவு அமைச்சகம் தகவல்!
டெல்லி: பிரதமர் மோடி கிர்கிஸ்தான் பயணத்தின்போது பாகிஸ்தான் வான் வழியை தவிர்ப்பதற்கு முடிவு செய்துள்ளார்.
வரும் 13 மற்றும் 14 தேதிகளில் கிர்கிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிலையில், கிர்கிஸ்தான் செல்வதற்கு பாகிஸ்தான் வான் வழியை பயன்படுத்தினால் பயண நேரம் பாதியாக குறையும். அதாவது, 8 மணிநேர பயணம் 4 மணிநேரமாக குறையும்.
ஆனால், பாகிஸ்தானிலுள்ள பாலகோட் பகுதியில் இயங்கி வந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியதையடுத்து, தனது நாட்டு வான் வழியை பாகிஸ்தான் மூடியது. மொத்தம் 11 வழிகளில் 2 வழிகளை மட்டுமே இப்போது பயன்படுத்த அனுமதி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் விமானம் பயணிப்பதற்கு அனுமதி தருமாறு பாகிஸ்தானிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொண்டதாகவும், அதேநேரத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரியதாக தெரிகிறது.
ஓபிஎஸ்சுடன் சென்று, ஆளுநரை எடப்பபாடி பழனிச்சாமி சந்தித்தது ஏன்? 3 முக்கிய விஷயங்கள்
இந்த நிலையில், பாகிஸ்தான் வான் வழியை தவிர்த்து வேறு வழியில், பிரதமர் மோடி கிர்கிஸ்தான் செல்ல முடிவு செய்யப்பட்டு இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளது. ஈரான், ஓமன் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக பிரதமர் மோடி விமானம் பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி பிரதமராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றபோது இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
காஷ்மீரிலுள்ள புல்வாமாவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான தற்கொலை தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் அரசுடன் கடுமையான போக்கை இந்தியா பின்பற்றி வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வெளியை தவிர்க்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்த விஷயமாக பார்க்கப்படுகிறது.
எனினும், கடந்த மே மாதம் 21ந் தேதி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அப்போதைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்றார். அவரது விமானம் பறப்பதற்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கியது நினைவுகூறத்தக்கது.