மக்களுக்கு என் மீது கோபம் இருக்கலாம்.. மன்னித்து விடுங்கள்.. கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள்.. மோடி
டெல்லி: கொரோனாவை தடுக்க கடுமையாக நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிலைமையை புரிந்து கொண்டு மக்கள் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 1024 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே கொரோனா வைரஸ் நாட்டு மக்களிடம் சமூக தொற்றாக மாறுவதை தடுக்க மார்ச் 24ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்துள்ளார். இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக இடைவெளி மூலம் மட்டுமே கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்பதால் மத்திய அரசு இந்த லாக் டவுன் உத்தரவை பிறப்பித்துள்ளது.
மனதின் குரல்
இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்றும் ரேடியோவில் "மனதின் குரல்" (மான் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி மக்களிடம் பேசுவது வழக்கம். அன்றைய மாதத்தில் நாட்டில் நடந்த முக்கிய மாற்றங்கள், நல்ல விஷயங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைப்பார். அத்துடன் மக்கள் எந்தெந்த விஷயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்தும் பேசுவார்.
கோபம் இருக்கலாம்
அந்த வகையில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் வானொலி வாயிலாக மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பேசினார், அப்போது அவர் கூறுகையில் "கொரோனாவை தடுக்க கடுமையாக நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். மத்திய அரசின் நடவடிக்கையால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உங்களில் பலருக்கு என் மீது கோபமும் இருக்கலாம்.. கொரோனாவுக்கு எதிரான இந்த யுத்தத்தில் நமக்கு இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தேவை.
ஆபத்தில் பாதுகாப்பு
யாரும் வேண்டுமென்றே விதிகளை மீற விரும்பவில்லை என்பதை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் அவ்வாறு செய்கிற சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை கூறி கொள்கிறேன். இந்த ஊரடங்கை பின்பற்றாவிட்டால், கொரோனா வைரஸின் ஆபத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது கடினமாகிவிடும்.
மருத்துவர்கள்
கொரோனா வைரஸுக்கு எதிராக சண்டையிடும் பல வீரர்கள் உள்ளனர், அவர்கள் வீடுகளிலிருந்து அல்ல, ஆனால் தங்கள் வீடுகளுக்கு வெளியே இருந்து போராடுகிறார்கள். செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகிய சகோதர சகோதரிகளே நம்முடைய முன் வரிசை போர் வீரர்கள்" என்றார்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆக்ரா குடும்பத்தினருடனும் பிரதமர் மோடி வானொலியில் உரையாடினார். பாதிக்கப்பட்ட குணம் அடைந்த 6 பேரும் பிரதமரிடம் பேசும் போத மருத்துவர்களுக்கும், ஆக்ரா அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
செவிலியர்களுக்கு நன்றி
இதையடுத்து மோடி தொடர்ந்து பேசுகையில் , "எந்தவொரு பொருள் ஆதாயத்தையும் விரும்பாமல் நோயாளிகளுக்கு சேவை செய்பவர் சிறந்த மருத்துவர் என்று ஆச்சார்யா சரக் கூறியிருந்தார். இன்று ஒவ்வொரு செவிலியருக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன், நீங்கள் அனைவரும் ஒப்பிடமுடியாத அர்ப்பணிப்புடன் செயல்படுகிறீர்கள். உலகம் 2020 ஐ செவிலியர் மற்றும் மருத்துவர்களின் சர்வதேச ஆண்டாக கொண்டாடுகிறது. மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ரூ50 லட்சம் காப்பீடு அறிவித்திருக்கிறோம்.
தனிமைப்படுத்ததல் அவசியம்
வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்படுபவர்களுடன் சிலர் தவறாக நடந்துகொள்கிறார்கள் என்பதை அறிந்தபோது நான் மிகவும் வேதனை அடைந்தேன். நிலைமையை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் சமூக இடைவெளியை அதிகரிப்பது என்பது. உணர்வு ரீதியான தூரத்தை குறைக்க உதவும். லாக்டவுன் காலத்தில் சிறப்பாக பணியாற்றி வருகின்ற வங்கி பணியாளர்கள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாளர்களுக்கு பாராட்டுங்கள். சமூக இடைவெளியை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும்" என்றார்.