ஓணம் சர்வதேச விழாவாக மாறி வருகிறது.. மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்.. வாழ்த்து!
டெல்லி: பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சிக்காக வானொலியில் உரை நிகழ்த்தினார். ஓணம் சர்வதேச விழாவாக மாறி வருகிறது, என்று கூறிய பிரதமர் மோடி கேரள மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பிரதமர் மோடி எல்லா மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்கள் முன் வானொலியில் பேசுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் மோடி முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருப்பார். இதில் நிறைய தகவல்களை அவர் பகிர்ந்து கொள்வார்.
இந்த நிலையில் மன் கி பாத் நிகழ்ச்சியின் 68வது நிகழ்வில் இன்று மோடி உரை நிகழ்த்தினார். நேற்று லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அன்லாக் 4.0 செயல்முறைகள் அமலுக்கு வர உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.
பிரதமர் மோடி இன்று தனது உரையில், கொரோனாவிற்கு இடையே நிறைய பண்டிகைகள் அடுத்தடுத்து வருகிறது.இது பண்டிகைகளுக்கான காலம். ஆனாலும் மக்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.
ஓணம் பண்டிகை தற்போது கேரளாவில் கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளை ஓணத்தை முன்னிட்டு அலங்கரித்து வருகிறார்கள். பூக்கோலம் போட்டு வீட்டை அலங்கரித்து வருகிறார்கள். ஓணம் - சத்யா உணவை கேரளா மக்கள் சமைத்து பகிர்ந்து கொள்கிறார்கள். பல விதமான கொண்டாட்டங்கள் விளையாட்டு போட்டிகளும் நடக்கிறது.
பல நாடுகளில் ஓணம் கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கூட ஓணம் கொண்டாடப்படுகிறது. ஓணம் சர்வதேச விழாவாக மாறி வருகிறது.
இயற்கையை குறித்து நினைப்பதற்காக, அதை கொண்டாட விழாக்கள் நடக்கிறது. பூமியை, இயற்கையை காப்பதற்காகவே திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்விலும் மக்கள் பொறுமையுடன் கொரோனாவிற்கு இடையே எளிமை செயல்படுகிறார்கள், என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் .