கேபினட் மீட்டிங்கின்போது பிரதமரை சந்தித்தார் அமித்ஷா.. மோடிக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுமா?
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதையடுத்து அரியானாவில் குருகிராமில் இருக்கும் மெதந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவர் கடந்த புதன் கிழமை நடத்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். இதையடுத்து பிரதமருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
இந்தியாவில் கொரோனாவுக்கு 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் அரசியல் பிரபலங்களான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, உத்தரப்பிரதேசம் ஜல் சக்தி அமைச்சர் மகேந்திர சிங், உத்தரப்பிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் ஆகியோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமித் ஷா, எடியூரப்பா, ஆளுநர் புரோஹித்.. ஒரே நாளில் 5 விவிஐபிக்களுக்கு கொரோனா.. என்ன நடந்தது?
அறிவுறுத்தல்
அமைச்சர் அமித் ஷாவின் உடல்நிலை நன்றாக இருக்கிறது என்றாலும், மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமித் ஷாவுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங்
கடந்த புதன் கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் கலந்து கொண்டனர். அன்றுதான் தேசிய கல்விக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருந்தது. அப்போது இவர்கள் அனைவரும் இடைவெளி விட்டே அமர்ந்து இருந்தனர்.
அயோத்திக்கு பயணம்
பிரதமரின் வீட்டில் முறையாக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் ஒவ்வொரு முறையும் பின்பற்றப்படுகிறது. பிரதமரின் வீட்டுக்குள் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படுகின்றனர். ஆரோக்கிய ஆப் பயன்படுத்தப்படுகிறது. கார்கள் முறையாக இடைவெளி விட்டு நிறுத்தப்படுகிறது. இந்த நிலையிலும் அமித் ஷாவுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதால், பிரதமரும் பரிசோதிக்கப்படுவாரா என்பது இதுவரை உறுதியாகவில்லை. நாளை மறுநாள் அயோத்தி செல்ல இருக்கும் நிலையில் அவர் உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார் என்று கூறப்படுகிறது.
கமல் ராணி வருண்
தனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாக அமித் ஷா அறிவித்தவுடன், இவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்ததாகவும், எனவே தன்னைத் தானே தனிமைபடுத்திக் கொள்ள இருப்பதாகவும் மத்திய அமைச்சர் பாபுலால் சுப்ரியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த வாரம் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உத்தரப்பிரதேச அமைச்சர் கமல் ராணி வருண் உயிரிழந்தார்.
60 சதவீதம் உயிரிழப்பு
நாட்டில் பொது தளர்வுகள் 3.0 அறிவிக்கப்பட்ட பின்னர்தான் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாகவே மக்கள் அதிகமாக கூடும் சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளம், பள்ளி, கல்லூரிகள், பார்கள் ஆகியவற்றுக்கு தடை நீடிக்கிறது. நாட்டில் கடந்த 110 ஒரு லட்சம் பேருக்கும் மேல் கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. 60 பேர் ஜூலை மாதத்தில்தான் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 50 சதவீதம் பேர் உயிரிழந்து உள்ளனர்.