அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. பிரதமர் மோடியின் ஜி7 பயணம் ரத்து.. ஆன்லைன் மூலம் கலந்து கொள்ள முடிவு!
டெல்லி: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்களால் ஜி7 மாநாட்டில் நேரடியாக கலந்துக்கொள்ளும் திட்டத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். நேரடியாக இந்த மாநாட்டுக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் இதில் கலந்து கொள்ள உள்ளார்.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் இரண்டாம் அலை காரணமாக சர்வதேச அளவில் பிரதமர் மோடியின் இமேஜ் பெரிய சரிவை சந்தித்துள்ளது. கொரோனாவை பிரதமர் மோடி எதிர்கொள்ளும் விதம் சர்வதேச ஊடகங்களில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த மாதம் 11-13 தேதிகளில் பிரிட்டனில் நடக்க இருந்த ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை மாற்றி இருக்கிறார் பிரதமர் மோடி. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பின் பெயரில் மோடி பிரிட்டன் பயணம் மேற்கொள்ளவதாக இருந்தது.
தற்போது இவர் பிரிட்டன் செல்ல மாட்டார், மாறாக ஆன்லைன் ஜி7 மீட்டிங்கில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் பிரிட்டன் பயணத்தில் Quad நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா மீட்டிங்கும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க அதிபர் பிடனை மோடி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் மோடியின் பிரிட்டன் பயணம் ரத்தாகி உள்ளதால் அந்த மீட்டிங்கிலும் மோடி கலந்து கொள்ள மாட்டார். சர்வதேச அளவில் பிரதமர் மோடியின் இமேஜ் சார்ந்துள்ள நிலையில் இந்த மீட்டிங்கிற்கு நேரடியாக செல்லாமல் அவர் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜி7 நாடுகள் என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இதாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். இதில் கலந்து கொள்ள இந்தியாவிற்கு பிரிட்டன் அழைப்பு விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.