யோகா தினத்திற்கான ஏற்பாடுகள் மும்முரம்... பிரதமர் மோடியுடன் ராஞ்சியில் 30 ஆயிரம் பேர் யோகா
டெல்லி: ராஞ்சியில் 21-ந் தேதி மோடி தலைமையில் 30 ஆயிரம் பேர் யோகா பயிற்சி செய்ய உள்ளனர்.
உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஐ.நா. சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது.
அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே ஆண்டு டெல்லியில் நடந்த பிரமாண்ட விழாவில் 191 நாட்டு பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியும் பங்கேற்று யோகா செய்தார்.
2016-ம் ஆண்டு சண்டிகரிலும், 2017-ம் ஆண்டு லக்னோவிலும், 2018-ம் ஆண்டு டேராடூன் நகரிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, யோகா மிகப்பெரிய மக்கள் இயக்கமாக உருவாகி வருவதாகக் கூறிய பிரதமர், உலகை துன்பத்திலிருந்து மீட்டு மகிழ்ச்சியான பாதைக்கு யோகா அழைத்துச் செல்வதாகவும் கூறினார். உலகை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய சக்தியாக யோகா உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
லேட்டாக வந்துட்டேன்... மன்னிச்சுக்கங்க.. திருப்பதியில் உருக்கமாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி
இந்தநிலையில், வருகிற 21-ந் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடக்க உள்ள யோகா தின கொண்டாட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.
பிரதமர் மோடி தலைமையில் 30 ஆயிரம் பேர் திரண்டு வந்து யோகா பயிற்சி செய்ய உள்ளனர். இதேபோன்று தலைநகர் டெல்லியில் ராஜபாட்டையில் யோகா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை டெல்லி மாநகராட்சியும் ஆயுஷ் அமைச்சகமும் இணைந்து செய்து வருகின்றன.