தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியாற்றக்கூடியவர்களில், 3வது சீனியர் அந்தஸ்திலுள்ள நீதிபதி அருண் மிஸ்ரா, இன்று ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்துரைத்துள்ளார்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொலைநோக்கு பார்வையாளர் என்றும் உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படும் பல்துறை மேதை என்றும் அருண் மிஸ்ரா குறிப்பிட்டார்.
காலாவதியான 1,500 சட்டங்களை நீக்கியதற்காக, பிரதமரையும், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தையும் வெகுவாக பாராட்டினார் அருண் மிஸ்ரா.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சர்வதேச நீதித்துறை மாநாடு 2020 - 'நீதித்துறை மற்றும் மாறிவரும் உலகம்' நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் நன்றியுரையாற்றுகையில் அருண் மிஸ்ரா இவ்வாறு புகழாரம் சூட்டினார்.
அவர் பேசியதாவது: மாறிவரும் உலகில், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் பொதுவானவை.
கண்ணியமான மனித வாழ்க்கை என்பதே எங்களின் முக்கியமான நோக்கம்.
உலகளவில் சிந்தித்து, உள்ளூரில் செயல்படும் பல்துறை மேதையான, நரேந்திர மோடி, எழுச்சியூட்டும் உரை நிகழ்த்தினார். அவருக்கு நன்றி.
மோடி உரை, பல்வேறு விவாதங்களைத் தொடங்குவதற்கும் மாநாட்டிற்கான நிகழ்ச்சி நிரலை கட்டமைக்கவும் ஊக்கமாக இருக்கும்.
தீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த ஜனநாயகம் எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுகிறது என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
சர்வதே தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளால் இந்தியா சர்வதேச சமூகத்தின் பொறுப்பான மற்றும் மிகவும் நட்பான உறுப்பினராக உள்ளது.
இந்தியா அரசியலமைப்பு கடமைகளுக்கு உறுதியளித்து, தீவரவாதத்திலிருந்து விடுபட்டு அமைதியான மற்றும் பாதுகாப்பான உலகிற்கு உத்தரவாதம் அளிக்கும் நாடு. வளர்ச்சி செயல்பாட்டில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், இந்தியா முன்னணியில் உள்ளது. இவ்வாறு அருண் மிஸ்ரா பேசியுள்ளார்.