விஜயவாடா கொரோனா தனிமைப்படுத்துதல் மைய தீ விபத்தில் 11 பேர் பலி- பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்
டெல்லி: ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் தீவிபத்தில் இறந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
Recommended Video
ஆந்திராவில் விஜயவாடாவில் உள்ளது சொர்ணா பேலஸ் எனும் நட்சத்திர ஹோட்டல். ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாலும் மருத்துவமனைகளிலும் இடமில்லாததாலும் இந்த ஹோட்டலை கொரோனா தனிமை மையமாக மாற்றினர்.
இங்கு 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தீயணைப்பு துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். மேலும் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தீவிபத்தில் தப்ப பால்கனிகளில் தஞ்சமடைந்த நோயாளிகள்.. பார்க்கவே பரிதாபத்தை வரவழைக்கும் வீடியோ
இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் விஜயவாடாவில் கொரோனா தனிமை மையத்தில் தீவிபத்தை அறிந்து வேதனை அடைந்துள்ளேன்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் தீவிபத்து சம்பவம் குறித்து கேட்டறிந்தேன். இந்த இக்கட்டான நேரத்தில் மத்திய அரசு ஆதரவாக இருக்கும் என்பதை உறுதியளித்துள்ளேன் என்றார்.
அது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்த சம்பவம் தொடர்பாக இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் விஜயவாடாவில் கொரோனா தடுப்பு மையத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்த செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன்.
மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார் அமித்ஷா.