தேர்தல் நெருங்குகிறது.. வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் புதிய பாலம்...பீகாரில் திறந்து வைத்த மோடி
டெல்லி: பீகார் மாநிலத்தில் கோசி ரயில் மெகா பாலத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், அந்த மாநிலத்திற்கான மின் திட்டங்களையும் மோடி துவக்கி வைத்தார்.
பீகார் மாநிலத்தில் நடப்பாண்டில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் அந்த மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வருகிறார்.
இன்று பீகார் மாநிலத்தை வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் கோசி ரயில் மெகா பாலத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இந்த திட்டத்திற்கு கடந்த 2003-2004 ஆம் ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்தியா - நேபாளம் இடையே ராஜதந்திர ரீதியாக இந்தப் பாலம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த திட்டம் நடப்பு கொரோனா கால கட்டத்தில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களைக் கொண்டு வேகமாக கட்டி முடிக்கப்பட்டது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்து இருந்தது. 1.9 கி. மீட்டர் தொலைவிற்கு இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 1887ஆம் ஆண்டில் நிர்மலி, பாப்தியாகி சரைகர் இடையே மீட்டர் கேஜ் பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தப் பாலம் 1934ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து அங்கு ரயில் இணைப்பு எதுவும் இல்லை. இந்த நிலையில் இன்று புதிய பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.
விவசாய மசோதா வரலாற்று சம்பவம்.. விவசாயிகளுக்கு புதிய சுதந்திரம் கிடைத்து விட்டது.. பிரதமர் மோடி
இந்தப் பாலத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசுகையில், ''இந்த திட்டத்துக்கு ரூ. 3000 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் பீகாரை மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்கள், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களையும் வலுப்படுத்தும். நான் ஒவ்வொருவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன்'' என்றார்.
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு நலப் பணிகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அங்கு பாலம் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.