தீவிரவாதிகள் சதி திட்டம் அம்பலம்.. அமித் ஷாவுடன் அவசர ஆலோசனை நடத்திய மோடி
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம், நக்ரோட்டாவில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் மற்றும் இந்திய பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த பயங்கர மோதலையடுத்து, இன்று, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிற உளவுத்துறை அதிகாரிகளுடன் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் டெல்லியில் இன்று மோடி அவசர சந்திப்பு மற்றும் ஆலோசனை நடத்தினார்.
2008ம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதியன்று நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலின் 12 வது ஆண்டு நினைவு நாளில், பயங்கரவாதிகள் டெல்லியில் ஒரு பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கிறது அரசு. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பழி வாங்குவதாக கூறிக் கொண்டு இந்த தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜம்மு மாவட்டத்தின் நக்ரோட்டா பகுதியில் உள்ள பான் டோல் பிளாசா அருகே நேற்று பாதுகாப்பு படையினரால் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மூச்சுக்காற்றும் விஷம்! இந்திய மக்களை நிலைகுலைய வைத்த 'லாக்டவுடன்'.. மறக்க முடியாத 2020 !
அவர்களிடமிருந்து 11 ஏ.கே .47 ரக துப்பாக்கிகள், 3 கைத்துப்பாக்கிகள், 29 கையெறி குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அவர்கள் பெரிய தாக்குதலை நடத்தும் திட்டத்ததோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், மோடியின் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.