சீனாவுக்கு மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகளுக்கும் மோடி கொடுத்த மெசேஜ்.. லடாக் விசிட் பின்னணியில் 5 காரணம்
டெல்லி: இந்திய, சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்திற்குமிடையே, மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் திடீரென இன்று லே பகுதிக்கு விரைந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
Recommended Video
லடாக் பயணம் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென இன்று காலையில் நிகழ்ந்தது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதில் முன்னறிவிப்பின்றி மோடி அங்கு சென்றுள்ளார்.
மோடியின் வருகை மற்றும் ராணுவத்தினருடன் அவரது ஆலோசனைகள், முக்கியமான ஐந்து விஷயங்களை சீனாவுக்கு மட்டுமில்லாது உலக நாடுகளுக்கு கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
11,000 அடி உயர பகுதி.. முறுக்கிய மீசை, குளிருக்கு ஜாக்கெட்.. ராணுவ கூடாரத்தில் அமர்ந்து மோடி ஆலோசனை
எல்லையை விட்டுத் தரமாட்டோம்
எல்லை கட்டுப்பாட்டு கோட்டை எப்படியாவது மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக முன்னேறிக் கொண்டு இருக்கிறது சீன ராணுவம். முன்பும் இதுபோன்ற முயற்சிகள் இருந்த போதிலும், இப்போது சீனா மிகவும் ஆவேசமாக இந்திய எல்லைகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதை தடுத்த போதுதான், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் மோடி எல்லைக்குச் சென்றுள்ளது, இந்தியா தனது எல்லைகளை விட்டு கொடுக்காது, இந்த பிரச்சினையை எளிதில் விடாது என்ற ஒரு தகவலை மறைமுகமாக சீனாவுக்கும் உலக நாடுகளுக்கும் பதிய வைப்பதற்காகத்தான்.
செலவு செய்ய தயார்
இந்திய எல்லைப் பகுதிகளில் தனது கட்டமைப்பு மற்றும் தளவாடங்களை அதிகரித்தது சீனா. ஆனால் இந்தியாவும், சமீபகாலமாக எல்லை பகுதிகளில் சாலை வசதி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இவ்வாறான கட்டமைப்பு நடவடிக்கைகளால் சீனா எளிதில் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முடியாமல் தடுக்கும் வல்லமையை இந்தியா பெறும் வாய்ப்பு உள்ளது. இதை தடுப்பதற்காகத்தான் கட்டமைப்புக் அணிகளுக்கு எதிராக சீன ராணுவம் முஷ்டியை முறுக்கிக் கொண்டு நிற்கிறது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை, ஒப்பிடும்போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 சதவீதம் அளவுக்குதான் இருக்கிறது. எனவே, சீன ராணுவத்துக்கு செலவிடும் தொகையை ஈடுகட்டும் அளவுக்கு இந்தியாவும் செலவுசெய்து மோதலை விரும்பாது என்பது பொதுக் கருத்தாக இருக்கிறது. ஆனால் இந்தியா எதற்கும் தயார் என்ற மெசேஜ் மோடியின் லடாக் வருகையின் மூலம் தெரியப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ஆதரவு
இந்தியா தனி நாடு கிடையாது. அதற்கு உலக நாடுகளின் ஆதரவு அதிகமாக உள்ளது. குறிப்பாக உலக பெரிய அண்ணன் அமெரிக்காவின் ஆதரவு முழுமையாக உள்ளது. ஐரோப்பாவில் உள்ள தனது படைகளை வாபஸ் பெற்று, தெற்கு சீன கடல் மண்டலத்தில் நிறுத்துவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து நாம் ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளோம். இஸ்ரேலிடம் இருந்து லேசர் குண்டுகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராணுவ கட்டமைப்பு வலுவாக கொண்ட பல நாடுகளும் இந்தியாவுடன் நட்பு பேணுவது இந்தியாவுக்கு பலம். எனவே நாங்கள் சீனாவின் மிரட்டலுக்கு அஞ்சப் போவது கிடையாது என்பது மோடியின் இந்த விசிட் மூலம் உறுதியாகிறது.
உலக நாடுகள் கோபம்
கொரோனா நோய் பரவலை உலகத்துக்கு சொல்லாமல் மறைத்து பிற நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு சீன அனுமதித்து விட்டது என்று கோபம் பல மேலை நாடுகளுக்கு இருக்கிறது. அதிகாரத்தில் இருப்போருக்கு மட்டுமல்லாது, அந்தந்த நாடுகளின் பொது மக்களுக்கும் இந்த கோபம் இருக்கிறது. ஹாங்காங் குடிமக்களுக்கு எளிதாக குடியுரிமை கொடுப்பதற்கு பிரிட்டன் முன்வந்துள்ளது. ஆஸ்திரேலியாவும் கூட தங்கள் நாட்டில் ஹாங்காங் மக்களை குடியமர்த்துவதற்கு இசைவு தெரிவித்துள்ளது. இவையெல்லாம் சீனாவின் மீதுள்ள கோபத்தின் வெளிப்பாடுகள்தான் என்கிறார்கள்.
அரசியல் மெசேஜ்
மோடியின் லடாக் விசிட் பின்னணியில் உள்நாட்டு அரசியலுக்கான மெசேஜும் சேர்ந்திருக்கிறது. லடாக் பகுதியில் இந்திய வீரர்கள் மரணமடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி மீதான விமர்சனங்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கூர்மையாக்கினர். சரணடைந்துவிட்டார் மோடி என்று கடுமையான குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்தனர். எனவே நேரடியாக லடாக் சென்று, தான் ஒரு தைரியமான பிரதமர் என்ற ஒரு மெசேஜை எதிர்கட்சிகளுக்கு அவர் கொடுத்துள்ளார். கண்டிப்பாக பொதுமக்களுக்கும்தான். இந்த நிலையில்தான், #ModiStrongestPmEver என்ற மெசேஜ் ட்விட்டரில் ட்ரென்ட் செய்யப்பட்டு வருவதையும் கவனிக்க முடிகிறது.