16-இல் கெஜ்ரிவால் பதவியேற்பு விழா.. வாரணாசி செல்கிறாரா பிரதமர் நரேந்திர மோடி?
Recommended Video
டெல்லி: டெல்லியின் மூன்றாவது முறை முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்கும் விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அன்றைய தினம் டெல்லியில் இல்லை என கூறப்படுகிறது.
டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த 11-ஆம் தேதி வெளியானது. இதில் ஆம் ஆத்மி 62 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது.
36 இருந்தால் டெல்லி சட்டசபைக்கு பெரும்பான்மை என்ற நிலையில் ஆம் ஆத்மியோ 62 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக டெல்லியை ஆட்சி செய்ய போகிறது. 51 வயதாகும் கெஜ்ரிவால் வரும் 16-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்றுக் கொள்கிறார்.
இந்த விழாவில் மற்ற மாநில முதல்வர்களுக்கோ அரசியல் தலைவர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. கெஜ்ரிவால் முதல்வராக நம்பிக்கை வைத்து வாக்களித்த டெல்லி மக்கள் முன் கெஜ்ரிவால் பதவியேற்பார் என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள அனைவருக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற நாளின் போது டெல்லி மக்களே நீங்கள் அதிசயத்தை நிகழ்த்தி காட்டி விட்டீர்கள். என் அன்பு எப்போதும் உங்களுக்கு உண்டு என கெஜ்ரிவால் தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் டெல்லியில் உள்ள 7 பாஜக எம்பிக்களுக்கும், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 8 பாஜக எம்எல்ஏக்களுக்கும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும் வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதால் அன்றைய தினம் மோடி டெல்லியில் இருக்கமாட்டார். எனவே அவர் கெஜ்ரிவாலின் விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.