அன்லாக் 3.0.. சினிமா தியேட்டர், ஜிம்கள் திறப்பா?.. முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை
டெல்லி: நாடு முழுவதும் வரும் 31-ஆம் தேதி முடிவடையவுள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதா இல்லை நீட்டிப்பதா என்பது குறித்து இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் நாடு முழுவதும் 6-ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து ஊரடங்கு உத்தரவை அடுத்த மாதமும் நீட்டிப்பதா அல்ல தளர்த்துவதா என்பது குறித்து இன்று மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி.
அப்போது திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சினிமா தியேட்டர்களை திறப்பதற்கு அனுமதி வழங்க உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு முன்னதாக தியேட்டர் உரிமையாளர்களை சந்தித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. அப்போது 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அமைச்சகமோ 25 சதவீத இருக்கைகளுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அது போல் மெட்ரோ ரயில் சேவைகளும் இயக்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது.