அது ஏன் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி..? பின்னணி இதுதான்.. மோடி பரபரப்பு பேச்சு
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியை இரண்டாவது தொகுதியாக தேர்ந்தெடுத்து களமிறங்குவதற்கு ஒரு பின்னணி உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவின் வார்தா தொகுதியில், பாஜக, சிவசேனா கட்சிகளின் கூட்டணி சார்பில், இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது பிரதமர் நரேந்திர மோடி பேசியதை பாருங்கள்:
'இந்து தீவிரவாதம்' என்ற சொல்லை பயன்படுத்தி இந்துக்களை அவமரியாதை செய்தது காங்கிரஸ். அமைதியை விரும்பும் இந்துக்களை தீவிரவாதிகள் என அழைத்த காங்கிரசுக்கு இப்போது பயம் வந்துள்ளது. இந்துக்களால் தங்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற அச்சம் காங்கிரசுக்கு உள்ளது.
எனவேதான், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில் போட்டியிட கூட காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சுகிறார்கள். இந்து தீவிரவாதம் என்பதை நிரூபிக்க ஏதாவது ஒரு சம்பவம் நடந்துள்ளதா? அப்படியிருந்தும் அந்த வார்த்தையை காங்கிரஸ் பயன்படுத்தியது. இதை இந்து மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
திராவிட இயக்கங்களின் வரலாற்றில் முதல்முறை.. மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு காரணம் என்ன?
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டு அவமானப்படுத்தியது காங்கிரஸ். இதுபோன்ற கட்சிகள், பாகிஸ்தானின் மொழியில் பேசிக்கொண்டு உள்ளன. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
உத்தர பிரதேசத்தின் அமேதி மட்டுமின்றி, கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அமேதியில் கடந்த முறை, பாஜக சார்பில் களம் கண்ட ஸ்மிருதி இரானியே இம்முறையும் ராகுல் காந்தியை எதிர்க்கிறார்.
இந்த நிலையில்தான் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மிக அதிகம் வாழக்கூடிய வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதை நரேந்திர மோடி இவ்வாறு சுட்டிக் காட்டி பேசியுள்ளார்.