அவசரப்பட்டு பெட்ரோல் டேங்க் ஃபில் பண்ணிறாதீங்க.. மோடி முக்கிய முடிவு?
Recommended Video
டெல்லி: பெட்ரோல், டீசல் விலைகள் விண்ணைத்தொடும் நிலையில், சர்வதேச மற்றும் இந்திய ஆயில் நிறுவன தலைமை அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாமானிய மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை குறைப்புக்கு மோடி முயற்சி செய்ய கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் இந்த ஆலோசனை கூட்டம் என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டுள்ளது.
விலையேற்றம்
இன்றைய நிலவரப்படி, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.72 என்ற விலையில் விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.75.46 என்ற அளவில் உள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.18 ஆக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த இம்மாத துவக்கத்தில் எரிபொருள் மீதான வரியை லிட்டருக்கு ரூ.2.50 குறைத்தது மத்திய அரசு.
மீண்டும் ஏறியது
விலை குறைப்புக்கு பிறகும் மீண்டும் அதே விலையை இப்போது எட்டிவிட்டது பெட்ரோல், டீசல் விலை. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
மோடி தலைமை
நிதி ஆயோக் ஏற்பாடு செய்துள்ள இன்றைய ஆலோசனை கூட்டத்தில், பிரதமர் மோடி தலைமையில், சர்வதேச மற்றும் இந்திய ஆயில் நிறுவன அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒபெக் நாடுகளின் பொதுச் செயலாளர் முகமது பர்கின்டோ, சவுதி ஆயில் அமைச்சர், காலித் அல் பலி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி, வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
ஃபுல் பண்ணிறாதீங்க
ஒன்ஜிசி தலைவர் சசி சங்கர், இந்தியன் ஆயில் கார்பொரேஷன் தலைவர் சஞ்சிவ் சிங், ஜிஏஐஎல் தலைவர் பி.சி.திரிபாதி உள்ளிட்ட பல அதிகாரிகளும் இதில் பங்கேற்கிறார்கள். தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோராம் மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புள்ளது. இதனால் அவசரப்பட்டு வாகன எரிபொருள், டேங்க்கை முழுசாக நிரப்பி விட வேண்டாம் என்கிறார்கள், அரசியல் தெரிந்தவர்கள்.