தேர்தல் முடிவுகளுக்கு முன்பே மீட்டிங்.. முக்கிய அமைச்சக உயர் அதிகாரிகளுடன் மோடி திடீர் ஆலோசனை
டெல்லி: தேர்தல் முடிவுகளே, இன்னும் வெளிவராத நிலையில், நேற்று திடீரென முக்கிய அமைச்சகங்களின், உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல்கள், ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளன. இதன் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, இரவு வரை நீளக்கூடும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று நிதித்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி திடீர் என ஆலோசனை நடத்தியுள்ளார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை அப்போது பிரதமர் கேட்டு பெற்றதாக அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது. மார்ச் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, இதுபோன்ற ஒரு கூட்டம் நடப்பது இதுதான் முதல் முறை.
பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அடுத்தும் தான் தான், பிரதமராக போகிறோம் என்ற முன்முடிவுடன் இந்த ஆலோசனைக் கூட்டத்தை மோடி நடத்தியதாக தெரிகிறது.
என்னோட ராசி நல்ல ராசின்னு நாளைக்கு பாடப்போறவங்க யார்- லோக்சபா தேர்தல் ரிசல்ட் 2019
எக்ஸிட் போல் முடிவுகளை வைத்தே பிரதமர் இந்த அளவுக்கு நம்பிக்கையோடு இருப்பது வியப்பாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்த வேண்டிய 100 நாள் வரைவுத் திட்டம் தொடர்பான அறிக்கையை தயார் செய்யுமாறு ஏற்கனவே அமைச்சகங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மோடி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.