மோடியின் 40 நிமிட அதிரடி, ஆவேச பேச்சு.. காஷ்மீர் இளைஞர்ளை ஒட்டுமொத்தமாக கவர்வாரா?
டெல்லி: ஜம்மு- காஷ்மீரில் மிகப் பெரிய தொழில் வளர்ச்சியை கொண்டு வந்தால் தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பது என்ற அஜெந்தாவை பிரதமர் மோடி கையிலெடுத்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி 39 நிமிடங்களுக்கு உரையாற்றினார். இதில் ஜம்மு- காஷ்மீரின் கடந்த கால வளர்ச்சி, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து பேசினார்.
எந்த ஒரு மாநிலமாக இருந்தாலும் அந்த மாநில மக்கள் முன்னேற கல்வி, தொழில், வேலை வாய்ப்பு, சுகாதாரம் ஆகியவற்றை ஏற்படுத்தி அவற்றை நன்றாக பராமரித்தாலே போதும். இதைத்தான் மக்கள் ஒவ்வொரு ஆட்சியாளர்களிடம் இருந்தும் எதிர்பார்க்கின்றனர்.
இளைஞர்கள்
இந்த ஆயுதத்தைதான் கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக அரசு கையிலெடுத்தது. அப்போது பாஜக அரசு 50 வாக்குறுதிகளை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்தது. அதில் பெரும்பாலும் இளைஞர்களை கவர்வதாகவே இருந்தது.
கருப்பு பணம்
அவற்றில் மிக முக்கியமானவை சில: குற்றம்புரிந்த மக்கள் பிரதிநிதிகள் மீதான நடவடிக்கையில் எந்த பாகுபாடும் காட்டமாட்டோம். பாஜகவினராகவே இருந்தாலும் நடவடிக்கை பாயும் என மோடி அளித்த வாக்குறுதி இளைஞர்கள் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்தது. அது போல் ஊழலை ஒழிப்போம், கருப்பு பணத்தை மீட்போம் என்று தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு
மிக முக்கிய வாக்குறுதியாக 70 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என கூறினார். ஜவுளித் துறையின் சொர்க்கமான ஈரோட்டில் ஜவுளி தொழிலுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்றார். இது போல் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் விதத்திலேயே வாக்குறுதிகளை வழங்கியது.
தீவிரவாதம்
இதனால் 2014-இல் பாஜக ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து மோடி பேசுகையில் மிகப் பெரிய தொழில் வளர்ச்சியை ஜம்மு காஷ்மீரில் கொண்டு வந்து தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பது என்று பேசியுள்ளார்.
வேலையின்மை
ஜம்மு- காஷ்மீரை பொருத்தவரை 18, 19 வயது இளைஞர்களில் பெரும்பாலானோர் கல்வீச்சு சம்பவத்திலும் கலவரம் நடத்துவதிலும் பயன்படுத்தப்படுகின்றனர். இதற்கு காரணம் வேலையின்மை என கூறப்படுகிறது.
கவருமா
காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என மோடி அறிவித்துள்ளதால் இந்த தேர்தலில் வெற்றி பெற இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும், காஷ்மீரின் வளர்ச்சி, தீவிரவாதம் ஒழிப்பு என இளைஞர்களை குறிவைத்தே பேசியுள்ளார். எனவே அவரது இந்த 39 நிமிட பேச்சு காஷ்மீர் இளைஞர்களை ஒட்டுமொத்தமாக கவருமா என்பது போக போகத்தான் தெரியும்.