லாக்டவுன் முடிந்தாலும்.. வைரஸ் இன்னும் அப்படியேதான் இருக்கு.. கவனமாக இருங்கள்.. மோடி வார்னிங்!
டெல்லி: லாக்டவுன் முடிந்தாலும் வைரஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே பண்டிகை காலங்களில் எச்சரிகையுடன் இருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறுகையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஊரடங்கு உத்தரவிலிருந்து இன்று வரை இந்திய மக்கள் வெகுதூரம் சென்றுவிட்டனர்.
ஆனால் ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. லாக்டவுன் முடிவுபெற்றாலும், வைரஸ் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. கடந்த 7 முதல் 8 மாதங்களாக ஒவ்வொரு இந்தியரின் முயற்சியால் இந்தியா நல்ல நிலையில் உள்ளது. அதை ஒரு போதும் மோசமான நிலைக்கு நாம் கொண்டு செல்லக் கூடாது.
பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தங்கள் கடமைகளை நிறைவேற்ற நாள்தோறும் மக்கள் வீடுகளை விட்டு சென்று வருகிறார்கள். பண்டிகைக் காலம் என்பதால் மார்க்கெட்டுக்கு மக்கள் குவியும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக இருந்தாலும் இந்த நாடுகளில் கொரோனா கேஸ்கள் குறைவது போல் குறைந்துவிட்டு தற்போது ஒரேடியாக உயர்ந்துவிட்டன. இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
விழாக்காலம் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது - மோடி வேண்டுகோள்
தடுப்பூசி கிடைக்கும் வரை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நாம் கைவிடக் கூடாது. நீங்கள் மாஸ்க் போடாமல் வெளியே வந்தால், உங்கள் அலட்சியத்தால், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் குழந்தைகளையும் வயது முதியவர்களையும் கொரோனா எனும் நெருக்கடியில் தள்ளிவிடுகிறீர்கள்.
நம் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் தடுப்பூசிக்காக கடுமையாக உழைக்கிறார்கள். இந்தியாவில் பல கொரோனா தடுப்பூசிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் பல மேம்பட்ட நிலைகளில் உள்ளன என்றார் மோடி.