எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம்.. பிரதமர் மோடி அதிரடி
டெல்லி: எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்கெனவே பிரதமராக இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. இதையடுத்து, புதிய 17-வது மக்களவைக்கான முதல் கூட்டத்தொடர், இன்று தொடங்குகிறது.
நம்பிக்கை
இந்த கூட்டத் தொடர் தொடங்குவற்கு முன்னதாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் புதிய நம்பிக்கையுடனும் கனவுகளுடன் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
ஜனநாயகம்
புதிய நண்பர்களையும் புதிய கனவுகளையும் பெற்றுள்ளோம். மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற பணியாற்றுகிறோம். வலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அவசியமாகும்.
தேவை
எதிர்க்கட்சியின் மதிப்பையும் தேவையையும் உணர்ந்துள்ளோம். மக்களவையில் எதிர்க்கட்சியினரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி
மக்களவையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். சுதந்திர இந்தியாவில் இந்த தேர்தலில்தான் அதிக எண்ணிக்கையில் பெண் எம்பிக்களையும் வாக்காளர்களையும் கண்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப புதிய எம்பிக்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.