நாட்டுக்காக 100% மேல் உழைத்துள்ளோம்.. லோக்சபா கடைசி அலுவல் நாளில் மோடி நெகிழ்ச்சி பேச்சு
டெல்லி: பாஜக அரசு, மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் 100 சதவிகிதத்திற்கும் மேல் உழைத்துள்ளது என, லோக்சபாவின் கடைசி அலுவல் நாளில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
16வது லோக்சபாவின் பதவிக்காலம் நிறைவடைந்து விரைவில் மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதால், இனிமேல் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகுதான் லோக்சபா கூட உள்ளது.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை, நன்றியுரையாற்றி பேசினார். அவர் கூறியதாவது:
16வது லோக்சபாவின் ஒரு அங்கமாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். 30 ஆண்டுகளுக்குப் பின் எனது தலைமையில் தான் ஸ்திரமான ஆட்சி அமைந்தது. இந்திய தேசமே தற்போது எங்களது அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில்தான் அதிக அளவு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. வெளிநாட்டு தலைவர்களும் தற்போது இந்திய தலைவர்களை மதிக்க தொடங்கியுள்ளனர்.
எனது ஆட்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது. நானோ, சுஷ்மா சுவராஜோ வெளிநாடு செல்லும்போது எங்களை வலிமையான இந்திய அரசின் அங்கமாகத்தான் பார்க்கிறார்கள்.
இந்த லோக்சபாவில்தான், கருப்பு பணத்திற்கும் ஊழலுக்கும் எதிராக சட்டங்கள் இயற்றப்பட்டன. ஜிஎஸ்டி என்ற மகத்துவமான சட்டம் இங்குதான் நிறைவேற்றப்பட்டது.
உலகம் இப்போதுதான், வெப்பமயமாதல் குறித்து விரிவாக பேசி வருகிறது. இந்தியாவோ, சர்வதேச சோலார் கூட்டணி மூலமாக இந்த பிரச்சினைக்கு தீர்வை ஆரம்பித்துவிட்டது. ஆதார் அட்டையை அமல்படுத்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தோம். உலக பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு மகளிர் அதிகம் பேர் இடம்பெற்றுள்ள அமைச்சரவை இது. 17 நாடாளுமன்ற அமர்வில் 8 அமர்வுகளில் 100 சதவீதத்திற்கும் மேல் பலன் கிடைத்தது. மொத்தத்தில் 85 சதவிகித பலன் கிடைத்தது.
பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பெண்கள் என்பது பெருமை. பெண் எம்.பிக்களுக்கு எனது வரவேற்பையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். பாஜக அரசு, மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் 100 சதவிகிதத்திற்கும் மேல் உழைத்துள்ளது.
ஐ.நா. அவையில் இந்தியாவின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன; கடந்த 5 ஆண்டுகளில் இடர்பாடுகளின்போது அண்டை நாடுகளுக்கு அனைத்து உதவிகளும் செய்திருக்கிறோம். இவ்வாறு மோடி பேசினார்.
PM Modi in Lok Sabha: The world today is discussing the issue of global warming and India has made an effort for the formation of the International Solar Alliance to combat this problem pic.twitter.com/vZdj9DhXgl
— ANI (@ANI) February 13, 2019