5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.. 13 நகரங்களில் சூப்பர்ஃபாஸ்ட் நெட்.. எங்கெல்லாம் தெரியுமா?
டெல்லி : இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 6வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை டெலிகாம் சேவையான 5ஜி இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ஐதராபாத் உள்பட 13 நகரங்களில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 5ஜி தொடர்பான பிற தொழில்நுட்பங்களையும் பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
குட்நியூஸ்.. ரூ.1.5 லட்சம் கோடி ஏலம்! இந்தியாவில் “ஒரு வாரத்தில்” 5ஜி சேவை - தொடங்கி வைக்கிறார் மோடி
5ஜி சேவையை தொடங்கி வைத்தார் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று இந்தியன் மொபைல் காங்கிரஸ் (ஐ.எம்.சி) மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் இந்தியாவில் 5ஜி சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் மூன்று பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் முன்பு 5ஜி இணையத்தின் மாதிரியை காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜியோ 5ஜி
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவை தொடக்க விழாவில், மும்பையில் உள்ள பள்ளி ஆசிரியரை மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய மூன்று வெவ்வேறு மாநிலங்களில் இருக்கும் மாணவர்களுடன் இணைத்து தொடர்புகொள்ள வைத்தது. இதன் மூலம், கல்விக்கு 5ஜி பெரும் பங்காற்றும் என விளக்கப்பட்டது.
பிரதமர் ஆய்வு
இந்த நிகழ்ச்சியில் 5ஜி தொடர்பான பிற தொழில்நுட்பங்களையும் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். 5ஜி அடிப்படையிலான டிரோன்கள், கழிவுநீர் கண்காணிப்பு அமைப்புகள், சுகாதாரம் தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் இணைய பாதுகாப்பிற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்கள் மூலம் விவசாய தொழில்நுட்பம் போன்றவற்றையும் பிரதமர் மோடி மேற்பார்வையிட்டார்.
5ஜி ஏலம்
சமீபத்தில், 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தன. மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகள் ஏலம் போனது. பெரும்பாலான அலைவரிசையை வாங்கி ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், நாட்டில் 5ஜி சேவை இன்று தொடங்கியுள்ளது.
13 நகரங்களில்
5ஜி நெட்வொர்க் சேவை முதற்கட்டமாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ஐதராபாத், லக்னோ, புனே, சண்டிகர், காந்திநகர், குருகிராம், ஜாம்நகர், அகமதாபாத் ஆகிய 13 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி மொபைல்
5ஜி நெட்வொர்க் வசதி கொண்ட மொபைல்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் 5ஜி நெட்வொர்க் சேவையை இயக்க முடியும். இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவை தொடங்குவதால், இந்த பண்டிகை காலத்தில் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.