கொரோனா தடுப்பூசி... நாளை ஹைதராபாத், அஹமதாபாத், புனே செல்கிறார் பிரதமர் மோடி!
டெல்லி: கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை பார்வையிடுவதற்காக நாளை ஹைதராபாத், அஹமதாபாத், புனே ஆகிய மூன்று இடங்களுக்கு பிரதமர் மோடி பயணிக்க உள்ளார்.
இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் சராசரித் தொற்றும் உயர்ந்து வருகிறது. இதுவரை மொத்த பாதிப்பு 92,66,706 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சம் கூறியிருந்தது.
இந்தியாவில் மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா உள்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மறையவில்லை அதிகரித்து கொண்டுதான் செல்கிறது.இதற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளும் கொரோனா தடுப்பூசிப் பணிகளை விரைவு படுத்தி உள்ளன,
சீரம்
இந்தியாவில், கொரோனா தடுப்பூசியைத் தயாரிக்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏழு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அவற்றில் புனேவில் இயங்கிவரும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) மற்றும் ஜெனோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன.
கோவேக்சின்
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா கொரோனா (கோவிட் 19) தடுப்பூசி தயாரிப்புக்காக, உலகளாவிய மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. . இதேபோல் ஹைதராபாத்தில் பாரத் பயோடெக் நிறுவத்தினர் இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான கோவேக்சினை உருவாக்கி வருகிறார்கள்.
அஹமதாபாத்
இது தவிர அஹமதாபாத்தில் உள்ள ஜைடுஸ் காடில்லா நிறுவனமும் கொரோனா தடுப்பூசி தயாரிக்கிறது. பிரதமர் மோடி நாளை புனே சென்று அங்கிருந்து ஹைதரபாத் செல்கிறார். இரவு மீண்டும் டெல்லி திரும்புகிறார். அஹமதாபாத் எப்போது செல்வார் என்பது குறித்து தகவல் இல்லை.
கொரோனா வைரஸ்
பிரதமர் நரேந்திர மோடியின் வருகை குறித்து புனே பிரதேச ஆணையர் சவுரப் ராவ் கூறுகையில், "சனிக்கிழமை (நவம்பர் 28) அன்று சீரம் இந்தியா நிறுவனத்திற்கு பிரதமர் மோடியின் வருகை குறித்து எங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அவரது முழுமையான பயணத் திட்டம் இன்னும் வரவில்லை
பிரதமரின் புனே வருகை, கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை ஆய்வு செய்வதையும், அதன் வெளியீடு, உற்பத்தி மற்றும் விநியோக வழிமுறைகள் பற்றி அறிந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டது என்றார்.