ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா.. நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் உரை
டெல்லி: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடியவுள்ள நிலையில் நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். அவர் நாளை பேசவுள்ளதை பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9152 ஆக உள்ளது. அதுபோல் பலியானோரின் எண்ணிக்கை 302 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. எனினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. மருத்துவர்களும் இன்னும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.
முதல்வர்கள்
இதனிடையே ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதல்வர்களும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடந்த காணொலி காட்சி மூலம் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர். எனினும் பிரதமரின் அறிவிப்புக்கு முன்னராக ஒரு சில மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா
பஞ்சாப், கர்நாடகம், மேற்கு வங்கம், ஒடிஸா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையும், மே 1-ஆம் தேதி வரையும் ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துவிட்டது.
தமிழகத்தில் ஊரடங்கு
பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்தால் மட்டுமே சமூக பரவல் தடுக்கப்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கு குறித்து பிரதமர் எடுக்கும் முடிவை பின் தொடருவோம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரவு
மேலும் ஒரு சில மாநிலங்களில் மட்டும் ஊரடங்கு நீட்டிப்பது பலனை தராது என்றும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஊரடங்கை நீட்டித்தால் மட்டுமே கொரோனாவை விரட்டியடிக்க முடியும் என தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகள், பிரதமரிடம் தெரிவித்துள்ளன. இதனால் நாளையுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடையும் நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஏதேனும் உத்தரவை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
|
முக்கிய முடிவு
ஆனால் பிரதமர் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவு குறித்து அவர் ஒரு முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.